சமூக ஊடகங்களை கண்காணிக்கும் முடிவு இல்லை: சமூக ஊடகங்களை கண்காணிக்கும் குழுவை உருவாக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபகாலமாக தவறான செய்திகள், வன்முறையை தூண்டும் கருத்துகள் வைரலாக பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வாறான பதிவுகளால் பல மோதல்களும், ஜாதி மற்றும் மத மோதல்கள் பெருகி வருவதாகவும், இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவது போன்ற வீடியோக்களும் பதிவிடப்படுவதாக கூறப்பட்டது. இதனால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை கண்காணிக்க தகுந்த வல்லுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. பிரதமர் அலுவலகமும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து சமூகஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோரைத் தண்டிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டிருந்தன.
அதன்படி நாட்டில் உள்ள 716 மாவட்டங்களிலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைக் கண்காணிக்கச் சமூக ஊடகத் தொடர்புப் பிரிவு அமைத்து, அதில் வல்லுநர்களைப் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொறியியல் பிரிவான பிஇசிஐஎல் (Broadcast Engineering Consultants India Limited) இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் என கூறப்பட்டது. இந்த அமைப்பு அனைத்து ஊடகங்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து செய்திகளை சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், கேபிள் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, ஆகியவற்றையும் கண்காணிக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்து இருந்தது. ஆனால் இது அவசர வழக்காக விசாரிக்கப்படவில்லை. அதன்படி ஒரு மாதத்திற்கு பின் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இதில் இன்னும் சரியான கொள்கையை வரையறுக்கவில்லை. எனவே, இப்போதைக்கு சமூக ஊடகங்களை கண்காணிக்கும் குழுவை உருவாக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.