குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் தலித் மக்களுக்காக போராடிவரும் ஜிக்னேஷ் மேவானி, தன் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தலித் மக்களுக்காக போராடிவரும் ஜிக்னேஷ் மேவானி, பனாஸ்கந்தா மாவட்டத்தின் வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானி தன் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அத்தொகுதியில் பாஜக சார்பாக விஜய் சக்கரவர்த்தி என்பவர் போட்டியிடுகிறார்.
ஜிக்னேஷ் மேவானியை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது. அப்போது அவர் பேசியதாவது,
ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் இந்த தேர்தலில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்?
பாஜக உருவாக்கியுள்ள போலியான குஜராத் மாதிரியை புரிந்துகொள்ள நாங்கள் பங்காற்றியிருக்கிறோம். உண்மையான பிரச்சனைகளை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறோம். நாங்கள் மூவரும் இளைஞர்களின் அங்கமாக இருக்கிறோம். பாஜகவை எதிர்த்து மக்கள் பல காலமாக கேள்வி எழுப்பவில்லை. அதற்கான, இடைவெளியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
இது காங்கிரஸை பலப்படுத்துமா?
நிச்சயமாக. அப்படித்தான் நான் இதை பார்க்கிறேன். பலவிதங்களில் காங்கிரஸ் எங்களால் பலமடைந்திருக்கிறது.
பாஜக வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?
பாஜகவுக்கு எதிரான என் போராட்டம் தொடரும். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து, எங்கள் பிரச்சனைகளை தீர்க்கவில்லையென்றாலும், அவர்களுக்கு எதிராக நான் போராடுவேன். ஒடுக்கப்பட்டவர்களின் குரலும்,பிரச்சனைகளும் கவனிக்கப்பட வேண்டும். நான் தோற்றாலும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 31 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக குறைப்பதற்கு நான் பணியாற்றுவேன்.
பாஜக தோற்றால் உங்களின் அடுத்த இலக்கு என்ன?
எனக்கு மிகப்பெரும் பலம் கிடைக்கும். என் குரல் தேசிய அரசியலில் ஒலிக்கும்.
ஹர்திக்கை ஏன் பாஜக தொடர்ந்து தாக்குகிறது?
ஹர்திக்குக்கு பெரும் மக்கள் ஆதரவு உள்ளது. அவர் பாஜகவுக்கு எதிராக வலுவாக செயல்படுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.