சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால், அபராதத் தொகையை செலுத்த முடியாது என பாலியல் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் வழக்கறிஞர் ஹரியானா-பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம், சிர்சாவை தலைமையிடமாக கொண்டு தேரா சச்சா சவுதா அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளானார். 2 பெண் பக்தைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வந்த வழக்கில், குர்மீத் ராம் ரஹிம் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, ஆகஸ்ட் 25-ம் தேதி ராம் ரஹீம்க்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 41 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹிமின் சார்பில் மேல்முறையீடு செய்யப்ட்டது. இந்த நிலையில், குர்மீத் ராம் ரஹிமின் வழக்கறிஞர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குர்மீத் ராம் ரஹிமால் அபாரதத் தொகையை செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து குர்மீத் ராம் ரஹிமின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக அபாராதத் தொகையை செலுத்த முடியாது என குர்மீத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட காலத்திற்குள் அபாராதத் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.