கிறித்தவர்களின் முக்கியமான ஒரு பண்டிகையாக ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து:
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது : “இந்த புனிதமான ஈஸ்டர் திருநாளில், நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள கிறித்துவ மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாளில்தான் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுவதால் அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறித்தவர்களுக்கு மிகப் புனிதமான இந்தப் பண்டிகை, அன்பு, தியாகம், மன்னித்தல் என்ற பாதையில் பயணிக்க மக்களை ஊக்குவிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து கற்றுக் கொண்டு, மனித குலத்தின் பொதுவான நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம்.
இந்த சவாலான நேரத்தில், கொவிட்-19க்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்த புனிதமான பண்டிகையை, `சமூக விலக்கல்’ முறையையும், அரசின் நெறிமுறைகளையும் கடைபிடித்து, நமது குடும்பங்களுடன் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாட உறுதி ஏற்போம்.”
குடியரசுத் துணைத் தலைவர் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து: குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எப்பொழுதும் இருளை வென்று ஒளி பரவும் என்பதை உயிர்த்தெழும் கதை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும், ஒட்டு மொத்த உலகமும், கொவிட்-19க்கு எதிராக வெற்றியுடன் மீண்டெழும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து கூறியுள்ளார்.
திமுக தலைவர் - மு.க.ஸ்டாலின்: கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் ஈஸ்டர் திருநாள் மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாள்!
ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டிய இந்த நாளில் நாம் எதிர்பாராத விதமாக சுகாதாரப் பேரிடரை சந்தித்து - சோதனைகளின் விளிம்பில் நிற்கிறோம். ஆனாலும், எத்தகைய துயரங்களையும் தாங்கும் இதயம் கொண்ட இயேசு பெருமானின் மனோதைரியத்துடன் - கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவரும் சுய சுகாதார பாதுகாப்புடனும் - மகிழ்ச்சியுடனும் ஈஸ்டர் திருநாளை கொண்டாடிட வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறேன்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் 'ஈஸ்டர் பெருவிழா' வாழ்த்து செய்தி: இறைமகன் ஏசுபெருமான் சிலுவைப்பாடுகளை ஏற்று, மானிடத்தை மீட்க மரணத்தை வென்று, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஒப்பற்ற விழாவாம் ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு எங்கள் இதயமார்ந்த உயிர்ப்பு ஞாயிறு நல்வாழ்த்துகள் உரித்தாகுக. இறைவனின் கருணையும், இரக்கமும் நம் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிரைந்திடட்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.