ஹரியானா மாநிலத்தில், தன் கார் மீது ஆம்புலன்ஸ் மோதியதாக கூறி, உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், உள்ளூர் பாஜக தலைவர் தர்ஷன் நாக்பால் என்பவர், இரவில் தன் கார் மீது ஆம்புலன்ஸ் மோதியதாக அதனை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால், நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 30 நிமிடங்கள் தாமதமாகி, அவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சியில், ஆம்புலன் ஒன்றின் பக்கத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து இறங்கிய உள்ளூர் பாஜக தலைவர் தர்ஷன் நாக்பால், ஆம்புலன்ஸை நிறுத்தி அதனுள்ளே இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இந்த வாக்குவாதத்தால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தாமதமானதால், நோயாளி ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, தர்ஷன் நாக்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஹரியானாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளை பின்தொடர்ந்து தொல்லைக் கொடுத்ததாக, அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் தராலாவின் மகன் விகாஷ் மற்றும் அவரது நண்பர் ஆசிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதே மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவரால் நோயாளி ஒருவர் உயிரிழந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.