Advertisment

இந்தியை முதன்மை மொழியாக்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு அறிவிப்பு

No proposal to make Hindi main language: Govt - இந்தி மொழியை, நாட்டின் முதன்மை மொழி ஆக்கும் திட்டம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hindi national language, hindi language, one nation one language, amit shah, amit shah hindi language comment, parliament winter session

hindi national language, hindi language, one nation one language, amit shah, amit shah hindi language comment, parliament winter session, இந்தி, முதன்மை மொழி, மத்திய அரசு, அமித் ஷா, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே அட்டை, திட்டம், மாநிலங்களவை, வைகோ, விளக்கம்

Deeptiman Tiwary

Advertisment

இந்தி மொழியை, நாட்டின் முதன்மை மொழி ஆக்கும் திட்டம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தி தின கொண்டாட்டத்தின்போது, ஒரு நாடு ஒரு மொழி என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. ஆனால், நாடு முழுமைக்கும் ஒரே மொழி என்று வருமானால், அது நாட்டிற்கே பெரும் அடையாளமாக மாறும். அந்த ஒரு மொழியின் வாயிலாக, அனைவரும் அந்த நாட்டுடன் தங்களை இணைத்துக்கொள்ள முடியும். அந்த ஒற்றை மொழி, பெரும்பாலானோரால் பேசப்படும் இந்தி மொழி என்று அமித் ஷா தெரிவித்திருந்தார்.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அமித் ஷா, இந்த விவகாரத்தில் பல்டி அடித்தார்.

அதேபோல, ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே அட்டை என்ற முறையை மத்திய அரசு விரைவில் கொண்டுவர உள்ளதாக அமித் ஷா அறிவித்திருந்தார்....

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வைகோ, இந்தி மொழி தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் எழுப்பினார்.

விளக்கம் : இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது, ஒரே நாடு ஒரே மொழி என்ற திட்டம் மத்திய அரசிடம் இல்லை. மொழி விவகாரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை மத்திய அரசு மதிக்கிறது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு, மாநிலங்களின் மொழி உரிமையை மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே அட்டை என்ற திட்டமும், மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா, இந்தி மொழியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதேநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் மட்டுமல்லாது, தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும், தமிழ் மொழியில் பேசி, பாரம்பரியமிக்க தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Narendra Modi Amit Shah Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment