ராம்நாத் கோவிந்த் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி உத்தரப்பிரதேசம் தேராப்பூரில் பிறந்தார். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய ராம்நாத், ஆர்.எஸ்.எஸ்-இல் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக இயங்கினார்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து இருமுறை (1994-2000 மற்றும் 2000-2006) ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராம்நாத், (1998-2002) ஆண்டுகளில் பாஜகவின் தலித் போர்ச்சா அமைப்பின் தலைவராகவும் இருந்தார். பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி, பீகாரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கான்பூர் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்ற பிறகு, சிவில் சர்வீசஸ் பரீட்சைக்குத் தயார் செய்ய, கோவிந்த் டெல்லிக்கு சென்றிருந்தார். முதல் இரு முயற்சியில் அவர் தோல்வியைத் தழுவினார். ஆனால், மூன்றாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றார்.
டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் 1993 வரை 16 ஆண்டுகள் வரை வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டார். 1971-ல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1977 முதல் 1979 வரை டெல்லி உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக இருந்தார். 1978 ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1980 முதல் 1993 வரை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசியலமைப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.
தற்போது பாஜகவின் இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.