மங்களூருவில் 99 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த திருடர்கள், இரண்டு நாட்களிலேயே திருடிய நகைகளையும் அதனுடன் ’அறிவுரை’ கடிதம் ஒன்றையும் உரிமையாளர் வீட்டு வாசலிலேயே வைத்துச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகம் மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் சேகர் குந்தேர். கடந்த செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி, சேகர் குந்தேர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களுடைய வீட்டின் கதவை உடைத்து, வீட்டினுள் இருந்த 99 சவரன் தங்க நகைகள் மற்றும் 13,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்நிலையில், வீட்டுக்கு வந்த சேகர் குந்தேர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நகைகள் கொள்ளையடிக்கபட்ட இரண்டு நாட்களிலேயே அவரது வீட்டின் வாசலில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், பை ஒன்றை வைத்துவிட்டு வேகமாக சென்றுவிட்டனர்.
அதில், திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் ஆகியவை இருந்ததாகவும், அவற்றை திருடிய தவற்றுக்காக வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றும் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வளவு பெரும் மதிப்புடைய பொருட்களை வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வீட்டு உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: ”அங்கிள், என்னை மன்னித்துவிடுங்கள்! வேலை கிடைத்தவுடன் பணத்தை தருகிறேன்”: புறாக்களை திருடிய பள்ளி மாணவனின் கடிதம்