தான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல எனவும், பிரதமர் மோடிக்கு எதிரானவன் எனவும், நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் இந்துக்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
’இந்தியா டுடே’ நாளிதழ் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரகாஷ் ராஜ், “என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என கூறுகின்றனர். ஆனால், நான் மோடி, அமித்ஷா, அனந்த்குமார் ஹெக்டே ஆகியோருக்கு எதிரானவன். அவர்கள் இந்துக்கள் அல்ல. கொலையை ஆதரிப்பவர்கள் இந்துக்கள் அல்ல”, என கூறினார். மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, “அரசியலமைப்பு சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்க வேண்டும்”, என்று கடந்த மாதம் கூறியிருந்தார். அதன்பின் எழுந்த சர்ச்சையையடுத்து, அக்கருத்துக்கு அமைச்சர் மன்னிப்பு கோரினார்.
மேலும், பத்மாவத் திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், அந்த மாநில அரசுகள் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், வலது சாரிய அமைப்புகள் மற்றும் அமைச்சர்களால் முன்வைக்கப்படும் சர்ச்சை கருத்துகளுக்கு எதிராக பிரதமர் மோடி தன் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.