Jammu & Kashmir Crisis :ஜம்மு - காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் ஞாயிற்றுக் கிழமை, இரவு (ஆகஸ்ட் 4ம் தேதி ) ஸ்ரீநகர் மாவட்டத்தை சிஆர்பிசி 144 பிரிவின் கீழ் கொண்டுவருவதற்கான அரசாணையைப் பிறப்பித்தது.
இந்த அரசாணை நள்ளிரவு (ஆகஸ்ட் 5, 12:01 Am ) முதல் நடைமுறைக்கு வந்தது . கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முதலே ஸ்ரீநகரில் மொபைல், பிராட்பேண்ட் இணையம் மற்றும் கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த உத்தரவு வந்துள்ளது.
இந்த 144 தடை சட்டத்தின் விளைவாய் ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது, அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் கல்வி நிறுவனங்கள் செயல்படாது. உத்தரவு வாபஸ் பெறும் வரை , அங்கு எந்தவிதமான பொதுக் கூட்டம் அல்லது பேரணி அல்லது அரசியல் கூட்டம் நடத்தப்படக்கூடாது என்று அந்த அறிவிப்பில் உத்தரவு வெளியாகியிருந்தது.
ஏற்கனவே,ஜம்மு பகுதியில் தற்காப்பு நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.