பண்டைய இந்தியாவில், துர்க்கை அம்மன் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், லஷ்மி நிதியமைச்சராகவும் இருந்து, இந்நாட்டை காத்து வந்ததாக, துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கூறியிருப்பதை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அமைந்திருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “பண்டைய இந்தியாவில் கல்வித்துறை அமைச்சராக சரஸ்வதியும், பாதுகாப்பு துறை அமைச்சராக துர்க்கையும், நிதியமைச்சராக லஷ்மியும் இருந்து நாட்டை பாதுகாப்பு வந்தது புராணங்களில் இருந்து தெரியவருகிறது.”, என கூறினார்.
மேலும், நாட்டில் இருக்கும் முக்கியமான நதிகளுக்கு கங்கை, யமுனை, காவிரி, நர்மதா என பெண்களின் பெயர்களையே வழங்கியிருப்பதாகவும், இந்தியாவை ‘பாரத மாதா’ என தாயாக மதிப்பதாகவும், இந்தியாவின் எதிர்கால வணிக தலைவர்கள் நிறைந்திருந்த அரங்கில் பேசியிருக்கிறார் வெங்கைய நாயுடு. மேலும், நாட்டின் கலாச்சாரத்தை எண்ணி மாணவர்கள் பெருமை கொள்ள வேண்டும் என மாணவர்களை அவர் அறிவுறுத்தினார்.
”உங்களிடம் பேசுபவர்களுக்கு உங்களின் தாய்மொழி தெரியாத நிலைமை ஏற்பட்டால் மட்டுமே வேற்று மொழிகளில் பேசுங்கள்”, என வெங்கைய நாயுடு கூறினார்.
மேலும், ராம ராஜ்ஜியம்தான் நல்லாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக குறிப்பிட்டார்.
“ராம ராஜ்ஜியம் நல்லதொரு ஆட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அதுகுறித்து பேசினால் அதற்கு மதச்சாயம் பூசப்பட்டுவிடும்”, என வெங்கையநாயுடு தெரிவித்தார்.
ஊழல், மதக்கலவரங்கள், சாதியம், அடிப்படைவாதம், பாலின பாகுபாடு, பெண்கள் மற்றும் நலிந்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை வேரறுக்க வேண்டும் என மாணவர்களை வெங்கைய நாயுடு அறிவுறுத்தினார்.