In Nashik’s Buddhist caves complex, a chance new find : ஆங்கிலேய ராணுவ அதிகாரி திரிரஷ்மி குகைகளை ஆவணப்படுத்திய 200 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய தொல்லியல் துறை நாஷிக்கில் உள்ள பண்டவ் லெனி மலைத் தொடரில் மூன்று புதிய குகைகளை கண்டறிந்துள்ளது.
குகைகளின் தொன்மை குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. புத்த பிக்குகளின் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது ஆனால் இன்னும் முறையாக அது நிருவப்படவில்லை. இந்நிலையில் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். திரிரஷ்மி குகைகளைக் காட்டிலும் இவை பழமையானவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
திரிரஷ்மி அல்லது பண்டவ லெனி என்று அழைக்கப்படும் குகைத் தொடர்களில் மொத்தம் 25 குகைகள் உள்ளன. இவை கி.மு. 2ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையில் மலைகளை குடைந்து குகைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 1823ம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஜேம்ஸ் டெலமைன் இந்த குகைகளை ஆவணப்படுத்திய நிலையில் இது தற்போது தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தளமாகும்.
ஏ.எஸ்.ஐ.யின் நாசிக் பிரிவில் 'மல்டி டாஸ்கிங் பணியாளர்' சலீம் படேல் மே 22 அன்று இரண்டு குகைகளை கண்டு ஆச்சரியம் அடைந்தார். இந்நிலையில் ஏ.எஸ்.ஐ. நாசிக் தலைவரான மூத்த பாதுகாப்பு உதவியாளர் ராகேஷ் ஷெண்டே இந்த பகுதியில் தேடும் பணியை தீவிரப்படுத்தினார். அது மூன்றாம் குகை இருப்பதை கண்டறிய உதவியது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பாக மலையில் உள்ள வடிகால் பாதையை சுத்தகரிக்கும் பணி நடைபெறும். அகற்றப்பட்ட மண், உலர்ந்த புல் மற்றும் உலர்ந்த மரக் கழிவுகளை கொட்ட இடம் தேடிக் கொண்டிருந்த போது படேல் இந்த குகைகளைக் கண்டறிந்தார்.
மரக்கிளைகளை அகற்றி நான் அருகே சென்ற போது மலையை குடைந்து உருவாக்கப்பட்ட குகைகள் இருப்பதை நான் கண்டறிந்தேன். உடனே நான் ஷிண்டே உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தேன் என்று சலீம் கூறினார். என்னுடைய 25 வருட பணி அனுபவத்தில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை. நான் அப்படி ஒரு மகிழ்ச்சியில் இருந்தேன் என்று அவர் கூறினார்.
குகைகளை கண்டறிந்த உடனே அதனை சுத்தம் செய்து பாதுகாப்பினை தீவிரப்படுத்தினோம். நாங்கள் மூன்று குகைகளையும் ஆவணப்படுத்தி தகவல்களை எங்கள் மூத்த அதிகாரிகளுக்கு கெஜெட்டில் பதிவேற்ற அனுப்பினோம். தற்போது பொதுமக்கள் இதனை பார்வையிட இயலாது. ஏன் என்றால் இங்கு வர முறையான பாதைகள் அல்லது வழித்தடம் இல்லை. குகைகள் “நோட்டிஃபை” செய்யப்பட்ட பிறகு மக்கள் பார்வையிட தேவையான வசதிகளை செய்வோம் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க : சிற்பக் கலையில் அதி முக்கியத்துவம் பெறும் சயன புத்தர்
மும்பையை அடிப்படையாக கொண்ட த்ரிரஷ்மி புத்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திய மொழிகள் மற்றும் கல்வெட்டுகளை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் அதுல் போஷெகர் புதிய குகைகளை பார்வையிட்டார் என்றும், மூன்றாவது கண்டுபிடிக்கப்படும் போது அவர் அந்த குழுவுடன் அங்கே இருந்ததாகவும் கூறினார்.
தற்போது இருக்கும் குகைகளுக்கு நேர் எதிரே 70-80 அடி உயரத்தில் புதிய குகைத் தொடர்கள் அமைந்துள்ளது. செங்குத்தான பாறைகளை குடைந்து இவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு மற்றும் தோற்றத்தை பார்க்கும் போது ஏற்கனவே இருக்கும் குகைகளைக் காட்டிலும் இவை பழமையானவை என்று போஷெகர் கூறியுள்ளார்.
முதல் இரண்டு குகைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. மூன்றாவது குகை ஒரே ஒரு துறவி மட்டுமே தங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து குகைகளிலும் வராண்டாக்கள் உள்ளன. கன்ஹெரி மற்றும் வை குகைகளில் இருப்பது போன்றே இங்கும் துறவிகள் தியானம் செய்வதற்காக சிறப்பு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
புத்தமதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஹீனயானாவை குறிப்பிடும் வகையில் நாசிக் பகுதியில் புத்த சிற்பங்கள் மற்றும் குகைகள் உள்ளன என்ற அவர், குகைகளில் புத்தர் மற்றும் போதிசத்துவர்களின் உருவங்களும், இந்தோ-கிரேக்க கட்டிடக்கலை வடிவமைப்புகளைக் கொண்ட சிற்பங்களும் உள்ளன என்றார்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள குகைகள் ஏற்கனவே இருக்கும் குகைகளைக் காட்டிலும் பழமையானவை. இருப்பினும் முறையான ஆய்வுகள் மற்றும் ஒப்பீடுகளின் மூலமே அவற்றை நிரூபிக்க இயலும் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரும் போஷெகரின் மகளுமான மைத்ரேயி பொஷேகர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.