லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் வன்முறை சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, இராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கியர் மற்றும் புல்லட் ப்ரூஃப் கவச உடைகளின் உற்பத்தியாளர்களை பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பு கொண்டது. லே உட்பட சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிற்கும் ராணுவ வீரர்களுக்குத் தேவைப்படும் 2 லட்சம் பாதுக்காப்பு கவசங்களை உடனடியாக உற்பத்தி செய்து கொடுக்குமாறு அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.
இதில், தற்போது மிகப்பெரிய திருப்பம் என்னவென்றால், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் (OEM) சீன மூலப்பொருட்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன. 2017ம் ஆண்டு இந்திய இராணுவத்துக்கு 1.86 லட்சம் புல்லட் ப்ரூஃப் உடைகளை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனமும் இதில் அடங்கும். நிறுவனம் தற்போது கவச உடைகளை விநியோகிக்கும் கட்டத்தில் உள்ளது.
எஸ்.எம்.பி.பி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ரூ.639 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டது தொடர்பாக இந்தியா பாராளுமன்றத்தில் பேசிய ராஜ்நாத் சிங், இராணுவத்திற்கு பாதுகாப்பு கவசங்கள் தயாரிப்பதற்காக சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு"எந்த தடையும் இல்லை" என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
எல்லையில் எதிர்பாராத வன்முறை அரங்கேறியதால், ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கான குரல்கள் தற்போது எழுந்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைவருமான வி.கே சரஸ்வத், சீனாவில் இருந்து வரும் இறக்குமதியை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய சரஸ்வத், “ஒரு வருடத்திற்கு முன்பு, புல்லட் ப்ரூஃப் போன்ற முக்கிய கவச உடைகளுக்கு சீன மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. தரத்தில் எங்களுக்கு அடிப்படை சந்தேகம் இருந்தது. இராணுவத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திடம் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மூலப்பொருட்களையும் சோதனை செய்யுமாறு வலியுறித்தியிருந்தோம். விலை மதிப்பீடு காரணமாக சீனாவிலிருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை தெளிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தற்போது உணர்கிறேன். துருப்புக்கள் அணியும் புல்லட் ப்ரூஃப் கவசங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் போன்ற மூலோபாய துறைகளுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி மூலப்பொருட்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தி செய்வதற்கான முக்கியமான மூலப்பொருட்களில் தற்சார்பு நிலையை அடைதல்" தொடர்பாக பாதுகாப்பு உற்பத்தித் துறையால் அமைக்கப்பட்ட குழுவின் ஒரு பகுதியாக இருந்த PHD தொழில் வர்த்தக சபை, சீன தயாரிப்புகளின் பயன்பாட்டை கைவிடுவது குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.
புல்லட் ப்ரூஃப் கவசங்கள் தயாரிப்புக்கு சீனாவிலிருந்து உயர் செயல்திறன் பாலிஎதிலீன் (HPPE) இறக்குமதியை கணிசமாக குறைக்க வேண்டும் என்ற அந்த கடிதத்தில் நேரடியாக குறிப்பிடப்படுகிறது. "பொதுவாக அனைத்து பாதுகாப்பு கவசங்கள் உற்பத்தியாளர்களும் தங்களது மூலப்பொருளை சீனக் குடியரசை தளமாகக் கொண்ட நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். மேலும் கணிசமான அந்நிய செலாவணி இந்த நிறுவனங்களுக்கு திருப்பி விடப்படுகிறது … நமது ராணுவ வீரர்களின் பாதுகாப்பு சமரசம் செய்யக்கூடாது என்பதற்காக சீனப் பொருட்களின் சார்புநிலையை கணிசமாகக் குறைப்பதற்கான ஒரு கொள்கையை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்….” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
இராணுவத்திற்கு புல்லட் ப்ரூஃப் கவசங்கள் வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எஸ்.எம்.பி.பி பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் எஸ் சி கன்சால் கூறுகையில் “ஆம், நாங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களை சார்ந்துள்ளோம். இருப்பினும், நாட்டு மக்களின் மனநிலையை நாங்கள் உணர்ந்து வருகிறோம் . தேவைப்பட்டால் இறக்குமதிக்கான மாற்று வழிகளைப் பார்ப்போம்” என்று தெரிவித்தார்.
அதிகளவு சீனா இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிறுவனங்கள்,பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்கு காத்திருக்கின்றனர். ஸ்டார் வயர் (இந்தியா) லிமிடெட் நிர்வாக இயக்குனர் மகேந்திர குப்தா கூறுகையில்," எங்களது நிறுவனம் பாதுகாப்பு கவசம் தொடர்பான உற்பத்திக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்துகிறது. ஆனால் சமீபத்திய மோதல்கள் மற்றும் நிலைப்பாட்டைப் பார்த்தால், பாதுகாப்பு கியர் தொழில் நிறுவனங்களுக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து தெளிவான வழிமுறை தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.
எம்.கே.யுவின் நிர்வாக இயக்குனர் நீரஜ் குப்தா கூறுகையில், பாதுகாப்பு கவச நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்யலாம். "மற்ற சர்வதேச சந்தைகளை விட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் சுமார் 60% -70% மலிவானவை. இருப்பினும், தரங்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுக்கப்பு இந்த துறையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.