பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாஸ்கோவில், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் Wei Fenghe-வுடன் பேச்சுக்கள் நடத்தினார். சீன அமைச்சரின் விருப்பத்தின் பேரில் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றன. சுமார் 2 மணிநேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் எல்லையில் பதற்றத்தை தவிர்த்து, அமைதியை ஏற்படுத்துவது குறித்தும், எல்லைகளை மதித்து நடப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
மோதல் போக்கை கடைபிடிக்கும் வகையில் படைகளைக் குவிப்பது, எல்லையில் அமைதியை சீர்குலைக்க முயலும் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது என்று இந்தியா சீனாவிடம் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
"எல்லையில் மோதல் போக்கை உருவாக்கியதற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்று Wei Fenghe ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேச மேல் சுபன்சிரி மாவட்டத்தில் நாச்சோ எனும் பகுதியில் வசிக்கும் 5 பேரை சீனா மக்கள் ராணுவம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவலை தீவிரமாக விசாரித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் வேட்டையாட சென்ற ஐந்து பேர் கடத்தி செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த கடத்தலில் இருந்து தப்பித்த இருவர், மாவட்ட காவல்துறையிடம் தகவல் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
" தகவல்களை சரிபார்த்து உண்மை நிலையை அறிய, நாச்சோ காவல் நிலையத்தின் நிலைய பொறுப்பு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உடனடியாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை காலையில் தான் அறிக்கை கிடைக்கும் ”என்று போலீஸ் சூப்பிரண்டு தாரு குசார் கூறினார்.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அனைவரும் Tagin சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, கிழக்கு லடாக் பகுதியில் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்து ஆய்வு செய்து வரும் ராணுவத் தலைவர் ஜெனரல் எம். எம். நாரவனே, இந்தியா- சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி பதட்டமான சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா - சீனா நட்புறவை வெளிபடுத்தும் விதமாக, வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17,500 அடி உயரத்தில் சில நாட்களுக்கு முன் வழி தவறிய மூன்று சீன மக்களுக்கு இந்திய ராணுவம் உதவிக்கரம் நீட்டியது. பூஜ்ஜியத்துக்கும் குறைவான குளிரில் அவர்கள் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த இந்திய வீரர்கள், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று சீனர்களைச் சென்றடைந்து அவர்களுக்கு உயிர் வாயு, உணவு, கதகதப்பான உடைகள் மற்றும் மருத்துவ உதவிகளை அளித்தனர்.
அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்துக்கான சரியான வழிகாட்டுதலை இந்திய வீரர்கள் அளித்த நிலையில், மூவரும் அங்கிருந்து கிளம்பினர். சரியான நேரத்தில் உதவியதற்காக இந்திய ராணுவத்துக்கு சீனர்கள் நன்றி தெரிவித்தனர் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.