Sushant Singh, Krishn kaushik
இந்தியா-சீனா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் (எல்ஏசி) பதட்டங்களைக் குறைப்பதற்காக இருநாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு கமாண்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவின் சார்பில் 14-வது படைப்பிரிவின் ராணுவ கமாண்டர் ஹரிந்தர் சிங் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பு பத்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
முன்னதாக, கடந்த ஜூன் 6 ம் தேதி இரு நாடுகளுக்கு இடையேயான முதல் கட்டபேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பதட்டங்களைத் தணிப்பதற்கான முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாடுகள் செயல்முறை படுத்த தவறியதால், கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் வெடித்தது. இந்த சூழலில் தான், இரு நாட்டு லெப்டினென்ட் ஜெனரல்களுக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு நேற்று நடைபெற்றது.
முந்தைய கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதே நேற்றைய சந்திப்பின் முக்கிய அம்சமாக இருந்தது என்று ராணுவ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார். எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் ஏப்ரல் மாதத்திக்கு முன்பிருந்த நிலையை மீட்டெடுப்பதை மையமாகக் கொண்டு முந்தைய சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய சந்திப்பின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட செயல்முறை கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து தொடங்கியது. அங்கு இரு தரப்பினரும் ஒரு ‘காப்பு மண்டலங்த்தை ’ (Buffer Zone) உருவாக்க ஒப்புக் கொண்டனர். இந்த மண்டலத்தில் இருந்து படிப்படியாக இரு நாட்டு துருப்புகளும் பின்வாங்க வேண்டும். எல்லைப் பகுதி ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்புகளுக்குப் பிறகு இந்த நடைமுறை செயல்படுத்தப்பட இருந்தது.
ஜூன் 15 அன்று, வரையறுக்கப்பட்ட காப்பு மண்டலத்தில் சீனாவின் எல்லைச் சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மோதல் ஏற்பட்டது.
பாங்கொங் சோ ஏரியின் வடக்குக் கரையில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் எல்லைப்புறக் கட்டமைப்பு பற்றியும், படைக்குவிப்பு பற்றியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேற்றைய சந்திப்பின் போது கூட, பாங்கொங் சோ விவகாரம் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒரு முக்கிய சர்ச்சையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீனா பாங்கொங் சோ விவகாரத்தில் இந்தியா ராணுவத்துடன் உடன்பாடில் ஈடுபட முற்றிலுமாக மறுத்து வருகிறது. மேலும், பாங்கொங் சோ ஏரியில் இந்திய ராணுவத்தின் படைக்குவிப்புக்கு எதிராகவும் சீனா கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.
முன்னதாக, எல்லையில் பதட்டங்களை குறைப்பதற்காக மேஜர் ஜெனரல் மட்டத்தில் நடைபெற்ற ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், நேற்றைய கூட்டம் படைப்பிரிவு கமாண்டர் மட்டத்தில் நடைபெற்றது.
படைப்பிரிவு கமாண்டர்கள் பேச்சுவார்த்தை ஒருபுறம் இருக்க, டெல்லியில் இரண்டாம் கட்ட ராணுவத் தளபதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியா – சீனா எல்லைப்பகுதி நிலவரம் குறித்து விவரித்தார். கருத்தியல் நிலை விவாதங்களுடன், முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படக்கூடிய இந்த மாநாடு தற்போது இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் முதல் கட்டம் 2020 மே 27 முதல் 29 வரையிலும், இரண்டாவது கட்டம் ஜூன் 22-23 தேதிகளில் நடைபெறுகிறது.
"வடக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் செயல்பாட்டு நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக இராணுவத் தளபதிகள் மாநாடு # ACC-20 ஜூன் 22-23, 2020 அன்று நடத்தப்படுகிறது," என்று ராணுவம் முன்பு தெரிவித்தது .
சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தலைமையில், பெய்ஜிங்கில் இராஜதந்திர மட்டத்திலும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.