2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் முன்னாள் பிரதமர் ராஜூகாந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்கள் விடுவித்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.
கடந்த 2002-ம் ஆண்டு அயோத்தியில் இருந்து திரும்பிய கோத்ரா ரயிலை சில கும்பல்கள் தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 59 பேர் பலியாகினர். மேலும் இந்த ரயில் எரிப்பு சம்பவம் குஜராத்தில் 2002-ம் ஆண்டு மதக்கலவரம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனை என மொத்தம் 31 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்கள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. இதனிடையே 17 ஆண்டுகள் சிறையில் இருந்த ரபீக் என்பவர் உட்பட 2 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி, பெரும்பாலான குற்றவாளிகள் 16 முதல் 18 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பல வழங்குகளில் விசாரணை நீதிமன்றத்தின் கேள்விக்குரியதாக உள்ளது. 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு விடுதலை வழங்க உத்திரபிரதேச அரசு பரிசீலித்து வருவதை மேற்கோள்காட்டி மரணதண்டனை விதிக்கப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
அதே சமயம் 2017-ம் ஆண்டு குஜராத் நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி இந்த குற்றவாளிகளை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட், மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, சராசரியாக 14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியுமா என்று குஜராத் அரசின் சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தாவிடம் கேட்டுக்கொண்டனர்.
இது குறித்து பேசிய துஷார் மேத்தா, இந்த குற்றம் ரொம்ப கொடூராமானது. சமர்மதி எக்ஸ்பிரஸின் எஸ் 6 பெட்டியில் வெளியில் இருந்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். எரியும் ரயிலில் இருந்து பயணிகள் தப்பிப்பதை தடுக்க குற்றவாளிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 59 பேர் உடல் கருகி பலியாகினர்.
இதைவிட கொடுமையான அரிதான குற்றம் இருக்க முடியாது. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 11 பேருக்கும் மரணதண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ஒருவர் தனது மனைவிக்கு புற்றுநோய் தாக்குதல் இருப்பதால், மனவளர்ச்சி இல்லாத தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்று கூறியதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.