இந்தியா - இஸ்ரேல் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிக்கை விட்டனர்.
இந்தியா - இஸ்ரேல் இடையே நட்புறவு வலுப்பெற்று வருகிறது. இதன் ஒரு அம்சமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு இரு தரப்பினருக்கும் நடுவே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் மோடி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, ஹோமியோபதி மருந்து உற்பத்தி, விவசாயம், திரைப்படத்துறை, அறிவியல்-தொழில்நுட்பம், சைபர் துறை உள்ளிட்ட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில்மோடி பேசுகையில், ‘இந்தியா வந்துள்ள எனது நல்ல நண்பரை வரவேற்கிறேன். இரு நாட்டு நட்டுப்புறவை மேம்படுத்துவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வுகளை நடைமுறைப்படுவதற்கான வாய்ப்பாகவே நேற்றும், இன்றும் நடந்த எங்களின் சந்திப்பு அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் இஸ்ரேல் சென்றேன். அப்போது 1.25 பில்லியன் இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்புறவையும் அங்கு எடுத்துச் சென்றேன். திரும்பி வந்த போது இஸ்ரேலிய மக்களின் அன்பு, மரியாதையை ஆகியவற்றை பெஞ்சமின் நேதன்யாகு மூலம் எடுத்து வந்தேன்.
இரு நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து இரு நாட்டு உறவை தூண்களை போன்று உறவை பலப்படுத்துவோம். விவசாயம், அறிவியல் - தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் விவசாயத்திற்கு இஸ்ரேலிடமிருந்து சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும். பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம், இஸ்ரேலிய நிறுவனங்களின் நேரடி அந்நிய முதலீட்டை இந்திய நிறுவனங்கள் பெற முடியும்’ என்றார் மோடி.
பெஞ்சமின் நேதன்யாகு பேசுகையில், ‘மோடி புரட்சிகரமான தலைவராக உள்ளார். மோடியால் வருங்காலத்தில் புரட்சிகரமான இந்தியா உருவாகும். இஸ்ரேலுக்கு வந்த முதல் இந்திய தலைவர் மோடி. அவரின் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போல் இல்லாமல் இந்தியாவில் வாழும் யூதர்கள் நிம்மதியாக உள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய நாகரீகம், சகிப்புதன்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் சிறப்பால்தான் இது சாத்தியப்பட்டது.
மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதல் எப்போதும் எங்கள் நினைவில் உள்ளது. இந்தியாவுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளோம் . இவ்வாறு பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.