உலக நாடுகளில் அதிவேகமாக பரவும் ஒமிக்ரான் எனப்படும் கொரோனாவின் புதிய மாறுபாடு, இந்தியாவிலும் அதன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. நேற்று கர்நாடகாவில் ஐந்து பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது
ஐந்து நோயாளிகளும் தார்வாட், பத்ராவதி,மங்களூருவில், உடுப்பி பகுதிகளை சேர்ந்தவர்கள் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், கர்நாடகாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அதிகாரிகளின் தகவலின்படி, தற்போது மகாராஷ்டிராவில் 54 பேரும், டெல்லியில் 22 பேரும், ராஜஸ்தானில் 17 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், தெலங்கானாவில் 20 பேரும், குஜராத்தில் 11 பேரும், கேரளாவில் 11 பேரும், மேற்கு வங்கத்தில் 4 பேரும் மற்றும் ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு ஆகியவற்றில் தலா ஒருவரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 132 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில், தொற்று பாதிப்பில் இருந்து 8077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 82,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதமாக பார்க்கப்பட்டு வந்த தடுப்பூசியின் பாதுகாப்பை ஒமிக்ரான் கேள்விக்குறியாக்கியுள்ளது. உலகளவில் உபயோகிப்படும் எந்தவொரு தடுப்பூசியும் ஒமிக்ரான் எதிராக திறன்பட செயல்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் மட்டுமே அதன் பூஸ்டர் டோஸில் ஒமிக்ரான் எதிர்த்து போராடுவதாகவும், ஆனால், பெரும்பாலான நாடுகளில் அந்த தடுப்பூசிகள் உபயோகத்தில் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒமிக்ரான் ஊடுருவியுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil