கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. COVAX திட்டத்தின்கீழ் தடுப்பூசிகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
விறுவிறுப்பாகத் தடுப்பூசி பணி நகர்ந்து கொண்டிருக்கையில் தான், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. கொரோனா தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இதனை தொடர்ந்து, தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் மீண்டும் இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்கப்போவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறுகையில், " இந்த புதுப்பிக்கப்பட்ட ஏற்றுமதி முறை 'தடுப்பூசி மைத்திரி' என அழைக்கப்படும். உலகளாவிய தடுப்பூசி பகிர்வு தளமான கோவாக்ஸ் திட்டத்திற்கு இது உதவியாக இருக்கும். அண்டை நாடுகளுக்கு இதன் மூலம் நம்மால் முன்னுரிமை அளிக்க முடியும்.
ஏப்ரல் மாதத்திலிருந்து நாட்டின் மாதாந்திர தடுப்பூசி உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும், அது அடுத்த மாதத்தில் உற்பத்தி நான்கு மடங்காக உயரவுள்ளது.
அடுத்த மாதம் முதல் 30 கோடி வேக்சின்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 4 நாள்களில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரித்துள்ளது. தினமும் 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
பயாலஜிக்கல் இ போன்ற நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 100 கோடி வேக்சின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம் இந்தியர்களின் தேவை போக அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றுமதியைத் தடை செய்யும் முன், இந்தியா சுமார் 6.63 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.