இந்தியாவின் கொரோனா நிலைமை மிகவும் கவலையாக உள்ளது, பல மாநிலங்கள் தொடர்ந்து கவலைக்குரிய எண்ணிக்கையிலான தொற்று பாதிப்புகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளைக் காண்கின்றன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு முதல் காலத்தை விட "மிகவும் ஆபத்தானது" என்றும் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் COVID-19 எழுச்சிக்கு WHO ஆதரவளித்து வருவதாகவும், ஆயிரக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், மொபைல் கள மருத்துவமனைகளுக்கான கூடாரங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது என்றும் கெப்ரேயஸ் கூறினார்.
"இந்தியாவில் பல மாநிலங்கள் தொடர்ந்து கவலைக்குரிய எண்ணிக்கையிலான தொற்று பாதிப்புகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளைக் காண்கின்றன," என்று அவர் தினசரி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
"இந்தியாவை ஆதரிக்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்," என்று WHO இயக்குநர் ஜெனரல் கெப்ரேயஸ் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு கொடிய அலைக்கு மத்தியில் இந்தியா உள்ளது. வெள்ளிக்கிழமை 3,43,144 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 2,40,46,809 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 2,62,317 ஆக உள்ளது.
இந்தியாவின் கோவிட் -19 பாதித்தோர் எண்ணிக்கை டிசம்பர் 19 அன்று 10 மில்லியனைத் தாண்டியது, ஆறு மாதங்களுக்குள் இது இரட்டிப்பாகியுள்ளது, இது மே 4ஆம் தேதி அன்று 20 மில்லியன் தொற்று பாதிப்புகள் எனும் கடுமையான மைல்கல்லை தாண்டிவிட்டது.
அவசரநிலை போன்ற நிலைமை இந்தியாவில் இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்தவில்லை என்று கெப்ரேயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
"நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகியவை அதிக தொற்று பாதிப்புகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைக் கையாளும் சில நாடுகளாகும்" என்று அவர் கூறினார், அமெரிக்காவில் சில நாடுகளில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான தொற்று பாதிப்புகள் உள்ளன, ஒரு பிராந்தியமாக, கடந்த வாரம் நடந்த அனைத்து COVID-19 இறப்புகளில் 40 சதவீதம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
ஆப்பிரிக்காவில் சில நாடுகளிலும் தொற்று பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. "இந்த நாடுகள் பாதிப்புக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். மேலும் இந்த நாடுகளுக்கு WHO அனைத்து வழிகளிலும் தொடர்ந்து ஆதரவை வழங்கும்," என்று அவர் கூறினார்.
கொரோனாவால் ஏற்கனவே உலகம் 3.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை இழந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ள கெப்ரேயஸ், “இந்த தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு முதல் காலகட்டத்தை விட மிகவும் ஆபத்தானது என்று நாங்கள் கவனத்தோடு கண்காணிக்கிறோம்.”
தடுப்பூசி வழங்கல் ஒரு முக்கிய சவாலாக உள்ளது. மேலும், பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றுடன் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது சவாலாக உள்ளது. ஆனால் இவற்றை செய்வதே தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி” என்று அவர் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.