நாடு முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான விலையை தினமும் மாற்றியமைக்கும் முறை ஜூன் 16-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மாதம் தோறும் இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமமைத்து வருகின்றன. ஆனால், இந்த முறைக்கு மாற்றாக தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் முறையை அமைக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்தது.
முன்னதாக கடந்த மாதம் மே 1-ந் தேதி முதல் புதுச்சேரி, சண்டிகர், ஜாம்ஷெட்பூர், உதய்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 5 பகுதிகளில் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான விலையை தினமும் மாற்றியமைக்கும் முறை சோதனை முறையில் தொடங்கப்பட்டது. கதனியார் எரிபொருள் நிறுவனங்களான எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனங்களும் இந்த நடைமுறையை அந்த பகுதிகளில் கடைப்பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான விலையை தினமும் மாற்றியமைக்கும் முறை ஜுன் 16-ந் தேதி அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 16-ந் தேதி முதல் தினமும் நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படும்.