ஸ்ருதி சக்ரபர்த்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ்:
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31-ஆம் தேதி, தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும், அது காலத்தின் கட்டாயம் எனவும் அறிவித்தார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அவர் அறிவித்தார். மேலும், ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம் எனக்கூறிய அவர், நேர்மையான மற்றும் தர்மமான அரசியல்தான் ஆன்மீக அரசியல் என விளக்கம் அளித்தார். முன்னதாக, அரசியல் வருகையை அறிவித்தபின், வெற்றியின் அடையாளமாக யோக முத்திரையையும் காண்பித்தார்.
தொடர்ந்து, புத்தாண்டு அன்று ரஜினிகாந்த் டிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அதில், வெள்ளை குர்தா மற்றும் கால்சட்டையுடன் தோன்றிய ரஜினிகாந்த், www.rajinimandram.org என்ற இணையத்தளத்தை அறிமுகம் செய்து தன் ரசிகர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவரது பின்னணியில் நீலம் - கருப்பு வண்ணத்தில் அதே முத்திரை இடம்பெற்றிருந்தது. அந்த முத்திரையின் கீழ் தாமரையும், அதனை சுற்றி பாம்பும் இருந்தது. பல ஆண்டுகளாக, இந்த ஹஸ்தா முத்திரை ரஜினி ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும் தோல்வியை சந்தித்த பாபா திரைப்படத்தில் ரஜினி இந்த முத்திரையை அதிகம் பயன்படுத்தியிருப்பார். தோல்வியைக் கண்ட திரைப்படத்தின் முத்திரையை தனது அரசியல் வருகைக்கும் அவர் பயன்படுத்தியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் ஓர் ஆன்மீகவாதி என்பது எல்லோரும் அறிந்ததே. பாபா, ராகவேந்திரர் உள்ளிட்ட ஆன்மீகவாதிகளை அவர் தன் குருவாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதில், பாபா முத்திரையைதான் அவர் தன் வெற்றி முத்திரையாக காண்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரை அவரது ஆன்மீக மற்றும் யோக நிலைமையை பிரதிபலிப்பதாக உள்ளது. தாமரை சின்னம், உடல், மன, பேச்சு இவற்றின் தூய்மையை உணர்த்துவதாக உள்ளது. பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைப்பார் என பேசுபவர்கள், இந்த தாமரையை பாஜக சின்னத்துடன் ஒப்பிடுகின்றனர். மறுபிறவி, மாற்றம், குணமடைதல், ஒழுக்கம் இவற்றை உணர்த்துவதாக பாம்பு குறியீடு உள்ளது.
யோகாவில் இந்த முத்திரை அபன வாயு முத்திரை எனப்படுகிறது. அபன வாயு முத்திரை என்பது நஞ்சு நீக்கம் மற்றும் தூய்மைபடுத்துதலுடன் தொடர்புடையது. தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினி அறிவித்தபோது, “சிஸ்டம் மாற வேண்டும். மக்களாட்சி என்ற பெயரில் அரசியல்வாதிகள் நமது சொந்த பணம், நிலத்தையே கொள்ளையடிக்கின்றனர். நாம் அடிப்படையிலிருந்து மாற்றத்தை துவங்க வேண்டும். உண்மை, செயல், வளர்ச்சி இவைதான் நம் கட்சியின் மூன்று மந்திரங்கள்”, என கூறினார். ஆக, மாற்றத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கும் ரஜினி, அபன முத்திரையை உபயோகித்தது மிகவும் ஏற்றதாக உள்ளது.
அபன முத்திரை என்றால் என்ன?
அபன வாயு முத்திரை உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், அதில் வாயு முத்திரை (சாய்ந்த நிலையில் உள்ள நடுவிரல்), பிரித்வி முத்திரை (சாய்ந்த நிலையில் உள்ள மோதிர விரல்) இரண்டும், தீய சக்திகளால் ஏற்படும் நோய்களிலிருந்து விலக்கி புத்துணர்ச்சியை அளிக்கும். அபன முத்திரையை கடைபிடிப்பதன் மூலம் மலச்சிக்கல், சிறுநீர் வெளியேறா நிலை, மூலம், வாய்வு உள்ளிட்ட தொல்லைகள் நீங்கும். ஹார்ட் அட்டாக் உள்ளவர்களையும் கூட இந்த முத்திரை இறப்பிலிருந்து காக்கும்.
பரதத்தில் இந்த முத்திரை சிம்ஹமுக முத்திரை எனப்படுகிறது.
சிம்ஹமுக முத்திரை:
பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி, ஆகிய நடனங்களில் சிம்ஹமுக முத்திரை உபயோகிக்கப்படுகிறது. சிங்கத்தை உணர்த்துவதாக உள்ள இந்த முத்திரை, தைரியம், தன் பெருமையை நிலைநாட்டும் போராட்டத்திலிருந்து பின்வாங்காத நிலையை குறிக்கிறது. “எனக்கு தொண்டர்கள் தேவையில்லை. மக்களின் உரிமைகளுக்காக போராடும் காவலர்கள் வேண்டும். நான் மக்களின் பிரதிநிதிமட்டுமே. இந்த படையை கண்காணிப்பவன்”, என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
கரண முத்திரை:
பௌத்தத்தில் இந்த முத்திரை கரண முத்திரை எனப்படுகிறது. புத்தாவின் பல ஓவியங்களில் இந்த முத்திரையை காணலாம். எதிர்வினை சக்திகளையும், தீயசக்திகளையும் விலக்கிவைக்கும் முத்திரையாக இது கருதப்படுகிறது.
சாத்தானின் கொம்பு:
1970-களில் டெவில்ஸ் ஹார்ன் சிம்பிளை ராக் ஸ்டார் ரோனி ஜேம்ஸ் டியோதான் உலகம் முழுவதும் பிரபலமாக்கினார். இதை தனது பாட்டி அடிக்கடி அந்த சின்னத்தை பயன்படுத்துவார் என ரோனி ஜேம்ஸ் கூறினார். அதன்பின், உலகம் முழுது, பலர் அந்த சின்னத்தை பயன்படுத்தினர்.
பல கலாச்சாரங்களில் ரஜினியின் சின்னம் பயணிக்கிறது. “தூய்மை, புனிதம், அதிகாரம்’ இவை மூன்றும் அதில் அடங்கியுள்ளது. இந்த மூன்றிலிருந்துதான் ரஜினிகாந்த் அரசியல் பயணம் விளங்கும் என்பது தெளிவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.