Deeptiman Tiwary
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் இயல்புவாழ்க்கையை பொறுத்து, உள்ளூர் நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றபிறகு, அங்கு கெடுபிடிகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி கூறியதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு நிலவும் இயல்புநிலையை உள்ளூர் நிர்வாகமும் தொடர்ந்து கவனித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனே எங்களுக்கு மிக முக்கியம். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையிலான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுபோன்ற தடையுத்தரவு போன்ற கெடுபிடிகள் புதிதல்ல என்றும், 2016ம் ஆண்டில் பிரிவினைவாத தலைவர் புர்ஹான் வாணி கொல்லப்பட்ட போது ஏற்பட்ட பதற்றத்தை தவிர்க்க மாதக்கணக்கில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே, தற்போது தடையுத்தரவு போன்ற கெடுபிடிகள் அமலில் இருப்பதாகவும், விரைவில் அது தளர்த்தப்படும் என்று அவர் கூறினார்.
காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவர்கள், உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையின்படியே, சட்டரீதியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சீரானதும் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். அவர்களை அரசியல் நோக்கத்திற்காக அரசு கைது செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.
காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவிவருவதாக சமூகவலைதளங்களில் உலாவரும் வீடியோக்களில் உண்மைத்தன்மையில்லை. அவை போலியாக சித்தரிக்கப்பட்டவை. அந்த வீடியோ வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த உயரதிகாரி மேலும் கூறினார்.