நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவில் திருத்தம் செய்துள்ளது. நேற்று (05/08/2019) உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இதனை அறிவித்தார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இனி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் என இரண்டு யூனியன்களாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய போது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ல் திருத்தம் செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறும்பொழுது, "இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக இன்று குறிக்கப்படுகிறது" என்றார். மேலும், ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவை ரத்து செய்ததன் மூலம் இந்தியா தான் அளித்த வாக்குறுதியை நிலைநாட்ட தவறிவிட்டது. அரசின் இந்த முடிவு சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ஸ்ரீநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அப்போது, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். மொபைல், பிராட்பேன்ட் இன்டர்நெட் மற்றும் கேபிள் டிவி ஒளிபரப்பு ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், பொதுக் கூட்டமோ அல்லது பேரணியோ நடத்தக் கூடாது எனவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. "மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது, கல்வி நிலையங்களும் மூடப்பட வேண்டும்" எனற அரசின் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்களது ஐடி கார்டுடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.