Jammu Pulwama attack : தெற்கு காஷ்மீரில் இருக்கும் புல்வாமா பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 37 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.
பத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 வண்டிகளில் சுமார் 2547 வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் விடுமுறையில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமது தார் என்பவர் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன் தான் ஓட்டி வந்த ஸ்கார்பியோ காரை ராணுவ வீரர்கள் வந்த வாகனத்தில் மோத வைத்து தாக்குதல் நடத்தினார். மேலும் படிக்க : யார் அந்த அதில் அகமது தார் ?
Jammu Pulwama attack நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன ?
ஜம்முவில் இருந்து நேற்று அதிகாலை 3:30 மணிக்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீநகரை அடைய வெறும் 35 கி.மீ இருந்த நிலையில், மாலை 03:30 மணி அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
எங்கிருந்தோ வந்த கார் நேரடியாக அந்த பேருந்து மீது மோதியதில் பேருந்து சுக்குநூறாக வெடித்து சிதறியது. அப்பகுதியில், நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் “மிகப் பெரிய அதிர்வினை உணர்ந்தோம். மிக சத்தமாக இந்த தாக்குதல் நடைபெற்றது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து தூக்கி வீசப்படும் அளவிற்கு சக்தி வாய்ந்த தாக்குதலாக இது இருந்தது.
தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு செய்தியாளர்கள் தடை செய்யப்பட்டனர். இணைய சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தலைவர்கள் கடும் கண்டனம் :
இந்த தாக்குதலுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த கோழைத்தனமான தாக்குதல்களுக்கு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
போதுமான அளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்ளாத காரணத்தால் மட்டுமே இப்படியான ஒரு தாக்குதலில் நாம் வீரர்களை பறிகொடுத்துள்ளோம் என்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அறிவித்திருந்தார்.
இதுபோன்ற மிகவும் மோசமான தாக்குலுக்கு கண்டனங்களை தெரிவிக்க வார்த்தைகள் போதவில்லை. இந்த பைத்தியக்காரத்தனம் முடிவுற இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப் போகின்றோம் என பீப்பிள் டெமாக்ரடிக் பார்ட்டியின் தலைவர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி ட்வீட் செய்துள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா “இந்த தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கின்றேண். மேலும் தங்களின் உறவை இழந்த குடும்பத்தினருக்கும் என்னுடைய அனுதாபங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் என ட்வீட் செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.