பைக் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜாவா' பைக்குகள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1970-களில் இந்தியாவில் பிரபலமான, கெத்தான பைக் என்றால் அது ஜாவா தான். இந்த பைக்கை வைத்திருப்பவர்கள் தான் அந்தே ஏரியாவிலேயே ஹீரோ. அந்தளவிற்கு அந்தக் காலத்து பைக் பிரியர்களை வசியப்படுத்தி வைத்திருந்தது ஜாவா. ஆனால் ஒருக்கட்டத்தில் ஜாவா பைக் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் ஜாவா பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கிறது. புதிய ஜாவா பைக்குகள், 293 சிசி திறன் இன்ஜினுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 27 பிஎச்பி திறனுடன், பியூயல் இன்ஜக்ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. 6 கியர்கள் கொண்டதாகவும் உள்ளது.
இந்நிலையில், ஜாவா மற்றும் ஜாவா 42 என இரண்டு பைக்குகள் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜாவா பைக்கின் விலை - 1.64 லட்சம்
ஜாவா 42 பைக்கின் விலை - 1.55 லட்சம்
இவை மொத்தம் 9 கலர்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச விலை ரூ. 1.89 லட்சமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை அடிப்படையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு விலையில் மாற்றம் இருக்கும்.
ஜாவா பைக் விற்பனைக்காக புதிய டீலர்களையும், விற்பனையாளர்களையும் நியமிக்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் முழு அளவில் விற்பனை தொடங்கும் என தெரிகிறது. அதுபோலவே இன்று முதல் முன்பதிவும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.