காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பாக 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு இயங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. நாடாளுமன்ற எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என அதிமுகவுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலம் இருக்கிறது மார்ச் 29 வரை காத்திருப்போம் என்று அதிமுக சார்பில் பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில், 6 வார இறுதி கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது. மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மாநில உரிமைகள் பறிக்கப்படும். ஒருவேளை அதனை அமைத்தால் அதற்கு மத்திய பாஜக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.