தமிழகத்தின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக காவல்துறையினருக்கு பெங்களூர் காவல்துறையினரிடம் இருந்து எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்கள் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தர மூர்த்தி என்பவர் தொடர்பு கொண்டு இந்த தகவலை அளித்ததாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டடிருந்தது.இதையடுத்து உஷாரான தமிழக காவல்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.மேலும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததால்,பாம்பன் பாலத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் என லாரி டிரைவர் கொடுத்த தகவல் வதந்தி என பெங்களூர் காவல்ர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெடிகுண்டு, பயங்கரவாத தாக்குதல் என வதந்தி பரப்பிய சுந்தர மூர்த்தியை கர்நாடக நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
65 வயதான சுந்தர மூர்த்தியிடம் வெடிகுண்டு வதந்தி பரப்பியது ஏன் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.