கார்த்தி சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ய மார்ச் 20 வரை தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கார்த்தி ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவரை சிபிஐ காவலில் வைத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே அதே வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரிக்க அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறையும் கைது செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அந்த மனுவை விசாரித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவிட்டது.
கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது. நீதிபதி எஸ்.ரவீந்திர பட் வழக்கை விசாரித்து, ‘சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் டெல்லி தனி நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில், அமலாக்கத் துறை கட்டாயப்படுத்தும் நடவடிக்கை (கைது) எதையும் எடுக்கக் கூடாது’ என உத்தரவிட்டார். மார்ச் 20 வரை இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக சிபிஐ தனி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் காவலை மேலும் 6 நாட்கள் நீடிக்க கேட்டு சிபிஐ மனு தாக்கல் செய்தது. கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வர இருக்கிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனின் நீதிமன்ற காவலை மார்ச் 22 வரை நீடித்து இன்று காலை தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.