Advertisment

ஒரு முரட்டுக் கட்சித் தொண்டர், ஒரு கைது; மோசமான வெளிச்சத்தில் கேரள சி.பி.எம்

ஆகாஷ் தில்லங்கேரியிடம் இருந்து பகிரங்கமாக விலகிக் கொண்ட சி.பி.ஐ (எம்); ஒரு காலத்தில் கட்சியின் சமூக ஊடக வட்டாரங்களில் பிரபலமான குரலாக இருந்த ஆகாஷ், இப்போது இளைஞர் காங்கிரஸ் தொண்டர் கொலைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்

author-image
WebDesk
New Update
ஒரு முரட்டுக் கட்சித் தொண்டர், ஒரு கைது; மோசமான வெளிச்சத்தில் கேரள சி.பி.எம்

ஆகாஷ் தில்லங்கேரி பிப்ரவரி 28 அன்று கேரள சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

Shaju Philip

Advertisment

பிப்ரவரி 21 அன்று, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தில்லங்கேரி என்ற கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சி.பி.ஐ(எம்) (CPI(M)) கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், முன்னாள் கட்சித் தொண்டரான ஏ.பி ஆகாஷ் என்ற ஆகாஷ் தில்லங்கேரியிடம் இருந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்டனர்.

பேச்சாளருக்குப் பின் பேச்சாளராக ஆகாஷை "கூலிப்படை மாஃபியா (குற்றம் சார்ந்த பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் கும்பல்)" என்றும் "ஆர்.எஸ்.எஸ்ஸை விடப் பெரிய எதிரி" என்றும் கூறிய நிகழ்வில் ஆகாஷின் தந்தை வஞ்சேரி ரவீந்திரன் முன் வரிசையில் அமர்ந்திருந்தார், "ஒழுக்கமுள்ள கட்சி ஊழியர்" என்ற முறையில் அவர் நிகழ்வில் கலந்துகொண்டது, கட்சியின் சில குண்டர் கூறுகளிலிருந்து கட்சியின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகும்.

இதையும் படியுங்கள்: கேரள சட்டசபையில் அமளி: 4 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், 5 பாதுகாப்பு அதிகாரிகள் காயம்

அந்த பொதுக் கூட்டத்திற்குப் பிறகு, பிப்ரவரி 28 அன்று, கேரள சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் போலீஸார் ஆகாஷைக் கைது செய்தனர். குறைந்தது 11 கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஆகாஷ், 2018 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் தொண்டர் எஸ்.பி ஷுஹைப் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் 10 கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள தில்லங்கேரியைச் சேர்ந்த ஆகாஷின் கூட்டாளி ஜிஜோவும் கைது செய்யப்பட்டார்.

கட்சியில் ஆகாஷின் உயரும் செல்வாக்கு மற்றும் சட்டத்தின் மீதான அவரது வெளிப்படையான மோதல்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தாலும், சி.பி.ஐ(எம்) கட்சி ஆகாஷிடமிருந்து தன்னைத் தூர விலக்கத் தூண்டியது கடந்த மாதம் அவர் ஒரு முகநூல் பதிவின் மூலம் கூறிய அதிர்ச்சியூட்டும் கூற்று. 28 வயதான ஆகாஷ், ஷுஹைப் கொலையில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்களை கட்சித் தலைவர்கள் ஆதரிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், "குற்றம் செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர்களுக்கு கூட்டுறவுத் துறையில் (இதில் கட்சிக்கு கேரளாவில் பெரும் பங்கு உள்ளது) வேலை வழங்கப்பட்டது, குற்றத்தைச் செய்தவர்கள் தூக்கி எறியப்பட்டு இப்போது வறுமை மற்றும் கட்சியிலிருந்து புறக்கணிப்பு ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்,” என்றும் ஆகாஷ் குற்றம்சாட்டினார்.

சமூக ஊடகங்களில் பிரபலமானவரான ஆகாஷ், கட்சிக்காக தனது வலிமையை (அடிதடிகளில் ஈடுபடுவது) பயன்படுத்தியது, அவரது பதவி உயர்வு மற்றும் சமூக விரோத செயல்களில் அவர் இறங்கியது ஆகியவற்றைக் கொண்ட ஆகாஷின் கதை, சி.பி.எம் அதன் அனைத்து உள்ளார்ந்த முரண்பாடுகளுடன், சமாளிக்க போராடிய கதை வகையாகும்.

***

கண்ணூரில் மலைப்பாங்கான பெரலிமலைக்கு அருகில் உள்ள தில்லங்கேரி என்ற கிராமம் சி.பி.எம் கட்சியில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. சுரண்டல் நிலப்பிரபுக்களுக்கு எதிராக அப்போதைய பிரிக்கப்படாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான 1948 ஆம் ஆண்டு புகழ்பெற்ற விவசாயிகள் எழுச்சியின் தளம், 75 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சிக்குள் இருக்கும் முட்டுக்கட்டைகளுக்கு எதிராக பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், சி.பி.ஐ(எம்) இன் மிகப்பெரிய சுயபரிசோதனைக்கான களமாக தில்லங்கேரி முடிந்தது.

publive-image

பல ஆண்டுகளாக, இந்த விவசாய கிராமத்திலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கம் பரவியபோது, ​​தில்லங்கேரியின் ஈர்க்கக்கூடிய மற்றும் அடிக்கடி நிகழும் அடிதடி அரசியல் சி.பி.ஐ(எம்) இன் வளர்ச்சியைப் பிரதிபலித்தது.

தில்லங்கேரி பஞ்சாயத்தில் சி.பி.ஐ(எம்) ஆட்சி நடைபெற்று வருகிறது, இங்கு அக்கட்சிக்கு 520 உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும், 2020 உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க 13 இடங்களில் இரண்டில் வெற்றி பெற்று தில்லங்கேரி அரசியலில் அறிமுகமானது. பெரும்பாலான கிராமவாசிகள் தினசரி தொழிலாளர்கள், பலர் கட்டுமானத் துறையில் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் பல கோவில்கள் உள்ளன, அவற்றில் சில கம்யூனிஸ்ட் குடும்பங்களால் நடத்தப்படுகின்றன.

தில்லங்கேரி ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சேரியில், ஆகாஷின் இரண்டு மாடி வீடு, லட்சுமி நிலையம் முன், இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஜீப் நிறுத்தப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் தனது மகன் ஆகாஷை சந்திக்க ரவீந்திரன் கண்ணூர் சென்றுள்ளார். பின்னர், தொலைபேசியில் பேசிய ரவீந்திரன், “ஆகாஷ் கைது செய்யப்பட்டது எனது தனிப்பட்ட பிரச்சினை. அவர் மீது கட்சி ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆகாஷைப் பற்றி எனக்கோ கட்சிக்கோ கவலை இல்லை. கட்சி எனக்கு நியாயமாக இருக்க வேண்டியதில்லை; கட்சி சமூகத்திற்கான அதன் அர்ப்பணிப்பு பற்றி மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும். பா.ஜ.க மற்றும் நரேந்திர மோடியை எதிர்த்துப் போராடுவதே கட்சியின் அக்கறை. இந்த கைது தொடர்பாக கட்சியை கண்டிக்க மாட்டேன். அரசியல் ரீதியாக, ஆகாஷ் இன்னும் இடதுசாரிகளுடன் இருக்கிறார். எனது கவலை எனது மகன் அல்ல, கட்சியின் நோக்கம், ”என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

ரவீந்திரன் கடந்த நான்கு தசாப்தங்களாக தில்லங்கேரியில் சி.பி.ஐ(எம்) இன் முகமாக இருந்து வருகிறார். விசுவாசமான தொண்டராக இருந்தும் ரவீந்திரன் கட்சி ஏணியில் ஏறியதில்லை. அவரது மனைவி தாக்ஷாயினி சி.பி.ஐ(எம்) மகளிர் அணி உறுப்பினராகவும், ஒருமுறை உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்தார்.

“அவர்களின் குடும்பம் கட்சியில் உறுதியாக உள்ளது. ரவீந்திரன் பாரம்பரியமாக பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆனால் கட்சிக்காக தனது செல்வத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டார். கட்சி தனது குடும்பத்திற்கு எந்தப் பாதுகாப்பையும் தராது என்பதை உணர்ந்த ஆகாஷ் சமூக விரோத செயல்களைத் தேர்ந்தெடுத்தார், ”என்று தில்லங்கேரியில் உள்ள ஒரு கட்சி தொண்டர் கூறினார்.

publive-image

தில்லங்கேரியில் ஒரு விவசாய நிலத்தில் ஒரு தியாகிகளின் தூண். இந்த கிராமம் 1948 ஆம் ஆண்டு நிலப்பிரபுக்களுக்கு எதிராக அப்போதைய பிரிக்கப்படாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒரு புகழ்பெற்ற விவசாயிகள் எழுச்சியின் தளமாகும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

கடந்த தசாப்தத்தில் அல்லது அதற்கு மேலாக, ஆகாஷ் விரைவான உயரங்களையும் மற்றும் அடிதடி அரசியல் மூலம் சி.பி.எம் கட்சியை வேகமாக வளர்ப்பதில் தீவிரமாக ஈடுப்பட்டதாலும், ஆகாஷ் இளம் கட்சித் தொண்டர்கள் மற்றும் அனுதாபிகளுக்கு ஒரு அணிதிரட்டல் புள்ளியாக உருவெடுத்தார். சி.பி.எம் மூத்த தலைவரும் கண்ணூரைச் சேர்ந்த கட்சியின் பலமானவருமான பி.ஜெயராஜனின் முகாமில் இருப்பதாக அறியப்பட்ட ஆகாஷ், ஜெயராஜன் ரசிகர்களின் ஃபேஸ்புக் பக்கமான பி.ஜே ஆர்மியின் உறுப்பினர்களில் ஒருவர். அதனால்தான், பிப்ரவரி 21 அன்று தில்லங்கேரியில் நடந்த கூட்டத்தில் ஆகாஷை நிராகரிக்க சி.பி.எம் முடிவு செய்தபோது, ​​ஆகாஷுக்கு எதிராக ஜெயராஜன் பேச வேண்டும் என்று வலியுறுத்தியது, இது தொண்டர்களுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புவதாகும்.

2016ல் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வினீஷ் கொலையில் ஆகாஷுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. வினீஷ் மீதான தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சி.பி.ஐ.(எம்) ஆகாஷுக்கு ஆதரவாக நின்ற நிலையில், உள்ளூர் சி.பி.ஐ.(எம்) தொண்டர் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் வகையில் ஆகாஷும் மற்றவர்களும் வினீஷை குறிவைத்ததாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், கைது மற்றும் பின்னடைவு ஆகாஷின் பிரபலத்தை சிறிதும் குறைக்கவில்லை. ஆகாஷ் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.,வுக்கு எதிரான சி.பி.ஐ(எம்) அணிவகுப்புகளுக்குத் தொடர்ந்து தலைமை தாங்கினார், அடிக்கடி ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பினார். ஒரு அணிவகுப்பு வீடியோவில், "வினீஷை வெட்டிய கத்தி இன்னும் அரபிக்கடலில் வீசப்படவில்லை" என்று ஆகாஷ் கூறுவது கேட்கப்படுகிறது.

வினீஷ் கொலையும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் கண்ணூரில் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ்-சி.பி.ஐ(எம்) மோதல்கள் நடக்கும் காலகட்டத்துடன் ஒத்துப்போனதால், அரசியல் போட்டியாளர்கள் மீதான பல தாக்குதல்களுக்குப் பின்னால் ஆகாஷ் விரைவில் பலமானவராக மாறினார். அரசியல் வட்டாரங்கள் ஆகாஷை குற்றவியல் அரசியலில் இருந்து விலக்கி வைக்கும் முயற்சி என்று கூறுப்படும், சி.பி.ஐ(எம்) அவரை திருவனந்தபுரத்தில் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் ஒரு பகுதியாக ஆக்குவதன் மூலம் அவரது பிரபலத்தைப் பயன்படுத்த முயன்றபோது, ஆகாஷ் விரைவில் தனது கிராமத்திற்குத் திரும்பினார்.

விரைவில், கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், ஆகாஷின் அறிக்கை மற்றும் கடத்தல் மோசடிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தொடர்புகள் பொதுமக்களுக்கு வெளிவரத் தொடங்கின. ஆர்.எஸ்.எஸ்.காரர் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டபோது ஆகாஷ் இந்த தொடர்புகளை வளர்த்துக் கொண்டதாக உள்ளூர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 2021ல், தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். 2018 ஆம் ஆண்டில், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஷுஹைப் கொலை வழக்கில் ஆகாஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும், இந்த முறை, சி.பி.ஐ(எம்) அவரை பதவி நீக்கம் செய்தது, ஆகாஷின் தவறான செயல்களின் நீண்ட பட்டியல் கட்சியை விட்டு வெளியேறியது.

***

மார்ச் 3 அன்று, சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பி.ஜே ஆர்மியுடன் ஆகாஷின் தொடர்பை சுட்டிக்காட்டினார். “ஆகாஷ் ஒரே இரவில் குற்றவாளியாக மாறவில்லை. அவரை பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாத்து வருகிறது,'' என்றார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், “சி.பி.எம் கட்சி குண்டர்களால் அடைக்கலம் பெற்ற கட்சி அல்ல. எந்த குற்றவாளிகளையும் நாங்கள் பாதுகாக்க வேண்டியதில்லை. குற்றக் கும்பலை ஒடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். கூலிப்படை கும்பல்களால் ஏற்படும் சவால்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை,'' என்று கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சி.பி.ஐ(எம்) கண்ணூர் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன், “கொலைகார கும்பல்களுக்கு” ​​கட்சி எந்த சமூக ஊடகப் பணியையும் ஒதுக்கவில்லை என்றார். மேலும், “மாஃபியா மற்றும் அத்தகைய கும்பல்களை எதிர்ப்பதுதான் கட்சியின் கொள்கை. தில்லங்கேரி சி.பி.ஐ(எம்) கட்சிக்கு தியாகிகளின் பூமி. இந்த மாஃபியா கும்பலுக்கு எதிராக கட்சி ஒற்றுமையாக போராடுகிறது. ஆர்.எஸ்.எஸ்.,ஸுக்கு எதிராக போராட எந்த கும்பலின் ஆதரவையும் நாங்கள் விரும்பவில்லை,” என்றும் அவர் கூறினார்.

தில்லங்கேரியில் உள்ள வட்டாரங்கள் கூறுகையில், கட்சிக்கு எதிராக ஆகாஷின் சமீபத்திய சீற்றம், அமைப்பு மீதான அவரது ஏமாற்றத்தில் இருந்து உருவானது. "கட்சி தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல அவரைப் பயன்படுத்தினாலும், கட்சி திருப்பி கொடுத்தது குறைவு என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. கட்சி தன்னைக் கவனிக்கத் தவறியதே சமூக விரோதச் செயல்களில் தவறி விழுந்ததற்குக் காரணம் என்றும் அவர் நினைத்தார்” என்று கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Cpim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment