கேரளாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து, அதன் அனைத்து சாராம்சங்களையும் கருத்தில் கொண்டு பொதுவான நிலைப்பாடு எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டசபையில் தெரிவித்தார்.
கேரள சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.சபரிநாதன், பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, ஜப்பான், தைவான், இந்தோனேஷியா, சீனாவின் சில மாகாணங்கள் உள்ளிட்ட வெளிநாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், கேரள அரசு அதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். “நாம் பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து ஆலோசித்திருக்கிறோம். அதைப்போல், மாதவிடாய் சுகாதாரத்திற்கும் நாம் வழிவகுக்க வேண்டும்.”, எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது, “சமூகத்தில் இன்னும் சில பிரிவினர் மாதவிடாய் காலங்களில் பெண்களை அசுத்தமற்றவர்களாக கருதுகின்றனர். பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது பல உடல்நல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். தற்போது, மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பதற்கான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், மாதவிடாய் ஒரு உடல் ரீதியான நடைமுறை என்பதை குறித்து தீவிரமான விவாதங்கள் நடைபெற வேண்டும்.”, என கூறினார்.
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிப்பதன் மூலம் அவர்களை அந்த நேரத்தில் விலக்கிவிடுவதுபோல் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
“இதன் அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்”, என முதலமைச்சர் கூறினார்.