கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மீட்பு குழுவினர்:
கடவுளின் தேசமான கேரளாவை கடந்த மாதம் வரலாறு காணாத மழை வாட்டி வைத்தது. இப்படியொரு மழை வெள்ளத்தை இதற்கு முன்பு சந்தித்திராத கேரள மக்கள் துயரத்தில் மூழ்கினர். நமது அண்டை மாநிலமான கேரளாவை வெள்ள துயரத்திலிருந்து மீட்டெடுக்க அனைத்து மாநிலங்களும் ஒன்றாக கைக்கோர்த்தனர்.
கேரளாவிற்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்தனர். ஆனாலும் மழை பாதிப்பில் இருந்து அந்த மாநிலம் சகஜ நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. வயநாடு, இடுக்கி, பாலக்காடு போன்ற பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பழுதுப் பார்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 26, 27 ஆகிய தேதிகளில் இடுக்கி, வயநாடு, பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டதால் இந்த 8 மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி கேரளாவில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இப்போது வரை மழையினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்த போதும், அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அவர்களை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த மழை காரணமாக மலை கிராமப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.