விபத்தில் சிக்கி உயிரிழந்த திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் குடும்பத்தாரிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மன்னிப்பு கோரியுள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 6-ம் தேதி இரவு 11 மணியளவில் கேரளாவில் உள்ள சாத்ணூருர் அருகே, இருச்சக்கர வாகன விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன், உயிருக்காக போராடியுள்ளார்.
இதையடுத்து அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக அவரை கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு செயற்கை சுவாச கருவி இல்லை எனகூறி அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதிக்க முயன்றபோது, தனியார் மருத்துவமனையும் அவருக்கு சிகிச்சை அளிக்க அலைக்கழிப்பு செய்துள்ளன.
சுமார் 7 மணி நேரம் ஆம்புலன்ஸிலேயே உயிருக்கு போராடியஅவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 5 மருத்துவமனைகள் மீது திருவனந்தபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கேரள சட்டமன்றத்தில் அம்மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயன் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது: உயிரிழந்த முருகனின் குடும்பத்தினரிடம், கேரளா அரசு சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கேரளாவில் இதுபோன்ற சம்பம் நிகழ்ந்தது என்பது வெக்கக் கேடானது. சட்டம் இயற்றினால் தான் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றால், அதற்கு சட்டம் கொண்டு வருவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.