கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், தன்னை கேலி செய்ததற்காக 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து எரித்ததாக, 43 வயது பெண்ணை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயா (வயது 43). இவர் கடந்த செவ்வாய் கிழமை தன் கணவருடன் காவல் நிலையத்திற்கு சென்று 14 வயது மகன் ஜித்துவை காணவில்லை என புகார் அளித்தார்.
அப்போது, ஜெயா காவல் துறையினரிடம் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தன் கையில் தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்பதற்கான பதிலையும் ஜெயா தெளிவாக விளக்கவில்லை.
இதையடுத்து, காவல் துறையினர் அப்பெண்ணின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டிலிருந்து சிறிது தொலைவிலிருந்து ஜித்துவின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, தீவிர விசாரணையயடுத்து, தன் மகனை தான் கொலை செய்ததாக ஜெயா ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜித்து ஏதோவொரு பிரச்சனையில் ஜெயாவை கேலி செய்ததாகவும், அதனால், ஆத்திரமடைந்து மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து எரித்ததாகவும், காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், ஜெயா சற்று மனநலம் சரியில்லாதவர் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.