பாம்புகளை பிடிப்பதில் பெரும்பாலும் ஆண்கள்தான் ஆர்வம் காட்டுவார்கள். அதன் நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், கேரளாவை சேர்ந்த ராஜி என்ற 33 வயது பெண் இவற்றுக்கெல்லாம் விதி விலக்காக இருக்கிறார்.
சிறு வயது முதலே பாம்புகளை கண்டால் அவருக்கு பயம் இருக்காது. கொடும் விஷம் கொண்ட நல்ல பாம்பு வரை அசாத்தியமாக பிடிக்கிறார். கடந்த 9 மாதங்களில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் பல்வேறு குடியிருப்புகளில் புகுந்த 119 பாம்புகளை பிடித்துள்ளார் ராஜி.
சிறு வயதிலிருந்தே பாம்புகளை பிடித்து பழக்கப்பட்டவர் ராஜி. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஊர்களுக்குள் புகும் நச்சு வாய்ந்த பாம்புகளை பிடித்து, தன் ஊர் மக்களின் பாதுகாவலராக இருக்கிறார் ராஜி. அவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மக்கள் உதவிக்கு அழைக்கின்றனர். அவரும் சென்று உதவ எப்போதும் தயாராகவே இருக்கிறார்.
ராஜநாகத்தை பிடிப்பதுதான் இருப்பதிலேயே கடினமானது என்கிறார் ராஜி. “காடுகளின் விளிம்புகளில் எங்கள் கிராமம் உள்ளது. ஆரம்ப காலகட்டத்திலிருந்தே பல விதமான பாம்புகளை பார்த்திருக்கிறோம். என்னுடைய குழந்தை பர்வத்திலிருந்தே எனக்கு பாம்புகள் என்றால் பயம் கிடையாது”, என கூறுகிறார் ராஜி. “நான் பாம்புகளை தொட்டுப் பார்க்க ஆவலாக இருப்பேன். அதனால் தான் இப்போது பாம்பு பிடிப்பவளாக மாறியிருக்கிறேன். இது என்னுடைய லட்சியம்”, என்கிறார் ராஜி.
“நான் பாம்புகளை பிடிக்க பணம் கேட்பதில்லை. சிலர் பணம் தந்தால் வாங்கிக்கொள்வேன். அவர்களிடம் பேரம் பேச மாட்டேன். ஏழைகள், முதியவர்களிடம் அவர்களே பணம் தந்தால் கூட நான் வாங்க மாட்டேன். இதை நான் சேவையாக கருதுகிறேன். உயிரை பணயம் வைத்து மக்களுக்கு உதவுவது போன்றது. இதை நான் தொடர்ந்து செய்வேன்”, என ராஜி நம்பிக்கையுடன் கூறுகிறார்.