கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், மஜத-வுடன் திடீர் கூட்டணி வைத்தது. இதனால் பாஜக ஆட்சியமைக்க வேண்டுமென்றால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் நிலவியது. இருப்பினும் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பாஜக-வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவையே ஆட்சியமைக்க அழைக்க, அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். மேலும் 15 நாட்களுக்குள் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவை அடுத்து, பதவியேற்ற இரண்டாவது நாளே, எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க நேரிட்டது. ஆனால், எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கர்நாடகத்தின் முதல்வராக 2-ஆவது முறையாக குமாரசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
விவசாயிகள் பெயரில் குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாயாவதி, பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரபாபு நாயுடு, சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்றனர். பாஜகவுக்கு எதிராக ஓர் அணியில் திரளும் முயற்சியின் ஒரு படியாக இந்த தலைவர்கள் இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்றுக் கொண்டனர்.
மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி, சோனியா மற்றும் ராகுலையும் கமல் சந்தித்தார்.
அதேசமயம், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.