சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 25 சதவீதத்தில் செயல்பட்டு வருவதாகவும்,எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று மருத்துவர் உமேஷ் பிரசாத் கூறினார்.
லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்தின் டாக்டர் பிரசாத், யாதவின் உடல்நிலை குறித்து அதிகாரிகளுக்கு எழுத்துப் பூர்வமாக இதை தெரிவித்தார்.
"சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது என்பது உண்மைதான். நிலைமை மிகவும் ஆபத்தானது. அவரது சிறுநீரக செயல்பாடு எப்போது வேண்டுமானாலும் மோசமடையக்கூடும். எப்போது என்று அதை கணிப்பது கடினம்" என்று டாக்டர் பிரசாத் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், உடலின் முக்கிய உறுப்புகள் சேதமடைவது அதிகரிக்கிறது. யாதவின் உடல்நல பாதிப்பின் தன்மை மிகவும் ஆபத்தானது. எந்த நேரத்திலும் அவசரகால நிலைமை ஏற்படக்கூடும் என்று யாதவின் உடல்நிலை குறித்து எழுத்து பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ”என்று அவர் மேலும் கூறினார்.
நீண்ட நாட்களாக இருக்கும் நீரிழிவு நோய் காரணமாக ஏற்பட்ட உறுப்பு சேதம் மீட்கமுடியாது என்பதால் அவரை வேறு எந்த மருத்துவ வசதிக்கும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. உண்மையில், எந்த ஒரு மருந்தும் இத்தகைய பாதிப்பை குணப்படுத்த முடியாது என்றும் டாக்டர் பிரசாத் தனது கருத்தில் தெரிவித்தார்.
"அவரை சிகிச்சைக்காக வேறு எங்காவது அழைத்துச் செல்ல வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றமோ அல்லது அரசாங்கமோ தான் முடிவு செய்ய வேண்டும். என் கருத்துப்படி, சிறுநீரகத்தின் செயல்பாட்டை 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக மாற்ற முடியாது. தனிப்பட்ட முறையில் மருந்து ஏதும் இல்லை. அதன் காரணமாகத் தான் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளை மேற்கொள்கிறோம்”என்று அவர் கூறினார்.
நெப்ராலஜிஸ்ட்டை அணுகி, லாலு பிரசாத் யாதவின் சிகிச்சையின் மேலதிக போக்கை முடிவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.