பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதியின் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள சைனிக் பண்ணை வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவரது கணவரின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ஷெல் நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சுரேந்திர குமார் ஜெயின், விரேந்திர ஜெயின் சகோதரர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையினர் அண்மையில் மேற்கொண்ட விசாரணையுடன் இந்த சோதனை தொடர்புடையது என கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ராஜேஷ் அகர்வால் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ரூ.8000 கோடி பண மோசடி வழக்கில் மிசா பாரதியுடன் அவர் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் நேற்றைய தினம் சோதனை நடைபெற்ற நிலையில், அவரது மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சராக லாலு இருந்த போது ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்தம் கோரியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள அவருக்கு சொந்தமான 12 இடங்களியில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. பிகார் மாநிலம் பாட்னா, டெல்லி, அரியானா மாநிலம் குர்கான், ஒடிசா மாநிலம் பூரி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி உள்பட 12 இடங்கள் மற்றும் பாட்னாவில் உள்ள லாலுவின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.