பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் படிட் சம்தானி கண்காணிப்பில் லதா மங்கேஷ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இந்திய ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா விருது", "பத்ம பூஷன் விருது", "பத்ம விபூஷன்" விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என இப்படி பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர்.
தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இந்திய திரையுலகில் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகிறார்.
லதா மங்கேஷ்கர் கடந்த செப்டம்பர் 28 அன்று 90வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
லதா மங்கேஷ்கர் உடல் நிலை குறித்து, பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில், "அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும், உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் மக்கள் தொடர்பு அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அவரது உடல் தற்போது 'சீரான' நிலையை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த பின்னடைவிலிருந்து அவர் வெளியே வர கடுமையாக போராடினார். ஒரு பாடகியாக இருப்பதால், அவரது நுரையீரல் திறன் அனைத்தையும் இழுத்துப் பிடித்து வைத்துள்ளது. உண்மையிலேயே அவர் ஒரு போராளி. லதாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வரும்போது அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.