Advertisment

சிக்கலில் சிவசேனா கட்சி, சின்னம்; பிறந்த நாளில் ஆதரவு கடிதங்களை பரிசாக பெற்ற உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டேவின் உரிமை கோரலால் தேர்தல் ஆணைய சிக்கலில் சிவசேனா கட்சியும் சின்னமும்; பலத்தை காட்ட தொண்டர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்களை பிறந்த நாள் பரிசாக பெற்ற உத்தவ் தாக்கரே

author-image
WebDesk
New Update
சிக்கலில் சிவசேனா கட்சி, சின்னம்; பிறந்த நாளில் ஆதரவு கடிதங்களை பரிசாக பெற்ற உத்தவ் தாக்கரே

Vallabh Ozarkar

Advertisment

Locked in EC battle with Shinde, Uddhav gets Sainik loyalty ‘affidavits’ on birthday: மஹா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் கிளர்ச்சியை அடுத்து, மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை 62 வயதை எட்டினார். மும்பையின் புறநகர் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது இல்லமான மாதேஸ்ரீயில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடவும், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் விசுவாசிகளான சிவசைனிக்கள் திரண்டனர்.

ஏக்நாத் ஷிண்டே பாரதிய ஜனதா கட்சியுடன் (பா.ஜ.க) கைகோர்த்து புதிய முதல்வராக பதவியேற்றார், பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராக ஆனார்.

இதையும் படியுங்கள்: 8 ஆண்டுகளில் 22 கோடி பேர் விண்ணப்பம்; 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கிய மத்திய அரசு

கடந்த ஒன்றரை மாதங்களில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உலுக்கிய அரசியல் முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, ​​புதன்கிழமை மாதேஸ்ரீ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மனநிலையும் சூழ்நிலையும் கொண்டாட்டமாக ஆனால் நிதானமாக இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் உத்தவ் தாக்கரேவின் பிறந்தநாளில் ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் மாதேஸ்ரீக்கு பரிசுகள், பூக்கள் மற்றும் பூங்கொத்துகளை வழங்குவதற்காகத் திரண்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கட்சி பிளவைக் கண்டதால் காட்சிகள் வித்தியாசமாக இருந்தது. பரிசுகள் மற்றும் பூக்கள் தவிர, இந்த முறை அவர்கள் மாதேஸ்ரீக்கு விசுவாச உறுதிமொழிகளின் குவியல்களுடன் வந்தனர், அதில் சைனிக்களால் கையெழுத்திடப்பட்ட பத்திரங்களுடன் கட்சித் தலைவருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோளுக்கு சிவசேனா நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் கட்சித் தொண்டர்களிடம் பேசியபோது, ​​இந்த முறை அவரது பிறந்தநாளில் பூங்கொத்துகளை விட, அவர்களால் கையெழுத்திடப்பட்ட ஆதரவு உறுதிமொழிகள் தேவை என்று உத்தவ் தாக்கரே அவர்களிடம் கூறினார். மேலும் பலரை சிவசேனா உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“இந்தப் போர் இப்போது இந்திய தேர்தல் ஆணையத்தை எட்டியுள்ளது, அவர்கள் (ஷிண்டே முகாம்) இப்போது தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு உங்களிடமிருந்து தீவிரமான, உறுதியான ஆதரவு தேவைப்படுவது மட்டுமல்லாமல், மேலும் பலரை கட்சி உறுப்பினர்களாக பதிவு செய்யவும் வேண்டும். நீங்கள் அனைவரும் இப்போது ஆதரவு பிரமாணப் பத்திரங்களை (கட்சி தொண்டர்களிடமிருந்து) சேகரிக்கத் தொடங்க வேண்டும் மற்றும் உறுப்பினர் படிவங்களை நிரப்ப வேண்டும். இந்த முறை கையொப்பமிடப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்களை எனக்கு பரிசாக கொடுங்கள், ”என்று உத்தவ் தாக்கரே சிவசேனா நிர்வாகிகளிடம் செவ்ரீயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.

சிவசேனாவின் பெயர் மற்றும் அதன் தேர்தல் சின்னம் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் தத்தமது உரிமைகோரல்களை முன்வைத்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் மீதான கட்டுப்பாட்டிற்காக இரு சிவசேனா பிரிவுகளுக்கு இடையேயான சண்டையின் பின்னணியில் உத்தவ் தாக்கரேவின் ஆதரவு கடித கோரிக்கை வந்தது.

கடந்த வாரம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு, சிவசேனாவின் "வில் அம்பு" சின்னத்தை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது, அதை வலுப்படுத்துவதற்காக லோக்சபாவிலும் மகாராஷ்டிர சட்டசபையிலும் அவரது பிரிவுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை மேற்கோள் காட்டியது.

இந்த விவகாரத்தில் கட்சியின் சட்டமன்ற மற்றும் அமைப்பு பிரிவுகளின் ஆதரவு கடிதங்கள் உட்பட அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு இரண்டு போட்டியாளர்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

அப்போதிருந்து, இரு சிவசேனா பிரிவுகளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை அணுகுவதற்கும், எழுத்துப்பூர்வமாக அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஒரு போட்டியில் சேர்ந்ததாகத் தெரிகிறது, அதை அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பார்கள்.

உத்தவ் தாக்கரேவுடன் இணைந்திருக்கும் சிவசேனா தொண்டர்கள், கட்சியில் எழுந்திருக்கும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு மத்தியில் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் பேரணிகளை நடத்தும் அதே வேளையில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் "விசுவாச பிரமாண பத்திரங்களை" சேகரிப்பதற்காக ஒரு சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த முறை உத்தவ்ஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம் முந்தையதை விட வித்தியாசமானது. கட்சி கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. உத்தவ் தாக்கரேவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவு தெரிவிக்கும் போது தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். அவருக்கு வாழ்த்துக்களுடன் வந்திருந்த நூற்றுக்கணக்கான சிவ சைனியர்கள் தாங்கள் சேகரித்த விசுவாசப் பத்திரங்களைக் கொண்டு வந்து அவருக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினர்,” என்று கூறினார்.

இதற்கிடையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ட்விட்டர் பதிவின் மூலம் உத்தவ் தாக்கரேயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார், அதில் அவரை முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் என்று குறிப்பிட்ட ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா தலைவர் என்று குறிப்பிடவில்லை, அதே நேரத்தில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

சிவசேனா பத்திரிக்கையான "சாம்னா" க்கு அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், உத்தவ் தாக்கரே தனது பங்கில் உள்ள ஒரே தவறு, இறுதியில் தனக்கு "துரோகம்" செய்த தலைவர்களுக்கு அதிகாரம் அளித்தது மற்றும் "அசுரத்தனமான லட்சியங்கள்" என்று கூறினார். ஏக்நாத் ஷிண்டேவின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில், சிவசேனாவை உடைத்து அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு சதித் தொடங்கியதாக அவர் கூறினார்.

சிவசேனாவை விட்டு வெளியேறியவர்களை, "புதிய இலைகள் தோன்றுவதற்கு முன்பு மரம் உதிர்க்கும் அழுகிய இலைகளுடன்" ஒப்பிடும் உத்தவ் தாக்கரே, தனது தந்தை பால் தாக்கரே நிறுவிய கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் கற்பிக்க மகாராஷ்டிரா மக்கள் தேர்தலுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Shiv Sena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment