Advertisment

லுடோ ஆப் மூலம் காதல்: கைது, நாடு கடத்தலில் முடிந்த இந்தியா-பாகிஸ்தான் கதை

லுடோ ஆப் மூலம் காதல் செய்த உத்திரபிரதேச இளைஞர்; அடையாளத்தை மறைத்து இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்; நாடு கடத்தலில் முடிந்த காதல் கதை

author-image
WebDesk
New Update
லுடோ ஆப் மூலம் காதல்: கைது, நாடு கடத்தலில் முடிந்த இந்தியா-பாகிஸ்தான் கதை

முலாயம் சிங் யாதவுடன் இக்ரா ஜீவானி; இக்ரா ஞாயிற்றுக்கிழமை நாடு கடத்தப்பட்டார்

Kiran Parashar , Asad Rehman

Advertisment

இக்ரா ஜீவானி மற்றும் முலாயம் சிங் யாதவின் காதல் கதையானது லுடோ ஆப் விளையாட்டில் 2019 இல் அப்பாவித்தனமாகவும் எதிர்பாராத விதமாகவும் தொடங்கியது. அவர்களின் எலக்ட்ரானிக் பகடைகளின் பல ரோல்களுக்கும் அவர்களின் மெய்நிகர் சிப்பாய்களுக்கும் இடையில் எங்கோ கடிகார திசையில் பந்தயத்தில், பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் உள்ள ஆன்லைன் லுடோ பிளேயரும் பெங்களூரில் உள்ள ஓசூர்-சர்ஜாபூர் சாலை லேஅவுட்டில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளியும் வெறித்தனமாக காதலித்தனர்.

திருமண உறவில் இருந்து பிரிந்ததால் கவலையுடன், தனது சொந்த ஊரில் டியூஷன் எடுத்த இளங்கலை மாணவியும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற காவலாளியும் 2022-ல் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் ஜனவரி 2023-ல் அவர்களது விசித்திரக் காதலுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான சிறப்புரிமை மீறல் விசாரணை; அழுத்தம் கொடுக்கும் ஜகதீப் தன்கர்

பாகிஸ்தானில் உள்ள தனது பெற்றோருக்கு அவர் செய்த வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்து உளவுத்துறை மூலம் எச்சரிக்கை செய்யப்பட்ட பெங்களூரு காவல்துறை, ஜனவரி 23 அன்று இக்ராவை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பெங்களூருவில் வசிப்பதற்காகவும் தனது அடையாளத்தை போலியாகக் காட்டியதற்காகவும் கைது செய்தது, அதே நேரத்தில் பாகிஸ்தானியர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக முலாயம் சிங்கும் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 19, ஞாயிற்றுக்கிழமை, இக்ரா இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை இக்ரா பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டதை காவல்துறை துணை ஆணையர் (ஒயிட்ஃபீல்ட்) எஸ் கிரிஷ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார்.

19 வயதான இக்ரா ஒரு மாதம் தங்கியிருந்த பெங்களூரில் உள்ள பெண்கள் இல்லத்தின் அதிகாரிகள், கேட்கத் தயாராக இருக்கும் எவரிடமும் அவர் அடிக்கடி கெஞ்சுவார்: “நான் என் வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். தயவுசெய்து என்னை (பாகிஸ்தானுக்கு) திருப்பி அனுப்ப வேண்டாம். தயவு செய்து என்னை அவனிடம் பேச அனுமதியுங்கள்.”

இது குறித்து பெங்களூரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இக்ரா கைது செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவிலேயே தனது கணவருடன் இருக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. அவள் அவனை மிகவும் நேசிக்கிறாள். இந்த ஜோடிக்காக நான் வருந்துகிறேன், ஆனால் ஒரு அதிகாரி என்ற முறையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை,” என்றார்.

பெங்களூருவிலிருந்து 1,500 கிமீ தொலைவில், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜின் மக்சூடன் கிராமத்தில், தனது பாகிஸ்தான் மருமகளை இதுவரை சந்திக்காத 55 வயதான சாந்தி யாதவ், “அவர்கள் இருவரையும் எங்கள் கிராமத்திற்கு அனுப்புங்கள். அவர்கள் திருமணத்தை நாங்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்கிறோம், ​​அதில் என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “காதல்வயப்பட்ட முலாயம், இக்ராவை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டம் தீட்டினார். செப்டம்பர் 2022 இல், இக்ரா துபாய் வழியாக காத்மாண்டுவுக்கு வர விமான டிக்கெட்டுகளை வாங்கினார். முலாயம் அவளை நேபாளத்தில் சந்தித்தார், அங்கு அவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்,” என்று கூறினார்.

தம்பதியினர் பின்னர் பேருந்தில் இந்தியாவிற்குள் நுழைந்து பெங்களூரு சென்றனர், அங்கு அவர்கள் ஜுன்னசந்திராவில் <தென்கிழக்கு பெங்களூரு> ஒரு கோவிலுக்கு அருகில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். முலாயம் காவலாளி பணிக்குத் திரும்பினார், அதே சமயம் இக்ரா அவர்களின் வீட்டைக் கவனித்துக் கொள்வதில் அதிக மகிழ்ச்சி அடைந்தார்.

இக்ராவின் தேசியத்தை மூடிமறைக்க, முலாயம் அவருக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கினார். ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், “அவர் தனது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி அவளுக்காகவும் ஒன்றை உருவாக்கினார். அவர் போட்டோவை மாற்றி, அவரது பெயரை ரியா யாதவ் என மாற்றினார்,” என்று கூறினார்.

ஆனால் எச்சரிக்கையை உயர்த்தியது போலி ஆதார் அட்டை அல்ல. இக்ரா பாகிஸ்தானுக்கு செய்த வாட்ஸ்அப் அழைப்புகள் தான், ஜி20 உச்சிமாநாடு மற்றும் ஏரோ இந்தியா 2023 ஆகியவை அவர்களின் வீட்டைக் குலுக்கிப் போட்டு, சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜி20 உச்சி மாநாடு மற்றும் ஏரோ இந்தியா 2023க்கு முன்னதாக பெங்களூருவில் பாகிஸ்தானியர் ஒருவரைப் பற்றிய தகவல் கிடைத்ததும் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம். விசாரணையில் இது காதல் கதையன்றி வேறில்லை என்பது தெரியவந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், அவர் சட்டவிரோதமாக மட்டும் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார் என்றும் உளவுத்துறைக்கு அறிக்கை அனுப்பினோம்,” என்று கூறினார்.

மற்றொரு விசாரணை அதிகாரி கூறுகையில், “அவர் பாகிஸ்தானுக்கு செய்த அழைப்புகள் காரணமாக மத்திய உளவுத்துறையின் கவனம் அவர் மீது விழுந்தது. பெங்களூருக்கு வந்து சில மாதங்களுக்குப் பிறகு, இக்ரா வாட்ஸ்அப்பில் குடும்பத்தினருடன் பேசினார் மற்றும் அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு முஸ்லீம் ஆண் என காண்பிக்கும் வகையில் முலாயமை சமீர் என்று அறிமுகப்படுத்தினார்,” என்று கூறினார்.

இக்ரா ஹிந்தியில் பேசியதால், உருது மொழி பேசினாலும், அக்கம்பக்கத்தினர் எதையும் சந்தேகிக்கவில்லை. (அவள் சரளமாக ஆங்கிலத்திலும் பேசினாள் என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.) அவர்களது பக்கத்து வீட்டுக்காரர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், சண்டையிடவில்லை என்றும் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் நினைவு கூர்ந்தார், “முலாயம் வேலை பார்ப்பவர், அவள் வீட்டு வேலைகளை செய்து வந்தாள். ஜனவரியில் அவர்களைக் கைது செய்ய போலீஸார் வந்த பிறகுதான் <இக்ராவின் குடியுரிமை> அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியவந்தது,” என்றார்.

மக்சூதானில் உள்ள ஹல்வாய் கிராமத்தில் உள்ள முலாயமின் சகோதரர் ரஞ்சித் யாதவ், 38, “முலாயமின் திருமணம் குறித்து எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அந்தப் பெண்ணை சந்தித்ததில்லை, அவளைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. அவரை போலீசார் கைது செய்த பிறகு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டது எங்களுக்கு தெரியவந்தது. ஆனால் அவர் ஒரு பெரிய தவறு செய்தது போல் இல்லை. அவர் இப்போது தான் திருமணம் செய்து கொண்டார், அதுவும் அனைவரின் சம்மதத்துடன். பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இப்போது, ​​நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்,” என்று கூறினார்.

பிரயாக்ராஜில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் குடும்பம் வாழ்கிறது, மேலும் முலாயம், ரஞ்சித் மற்றும் அவர்களது சகோதரர் ஜீத்லால், அவர்களின் 5.5 பிகாக்கள் நிலம் மற்றும் மூன்று பசுக்கள் மற்றும் ஒரு எருமையின் சம்பாத்தியத்தை நம்பியிருக்கிறது. ”முலாயமும் ஜீத்லாலும் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தைச் சேர்ந்த 20 இளைஞர்களுடன் பெங்களூரு சென்றனர். முலாயம் அங்கு பாதுகாவலராக பணிபுரிகிறார். உணவு டெலிவரி செயலிகளிலும் அவர் பணியாற்றினார்,” என்று ரஞ்சித் கூறினார்.

எப்போதாவது கண்ணீர் வடிக்கும் சாந்தி, “அவர் முன்பு ஒரு பாகிஸ்தானியர் ஆனால் இப்போது அவர் எங்கள் மருமகள்” என்று கூறினார்.

பிப்ரவரி 13 அன்று முலாயம் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார், ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அவரது மனுவை பெங்களூரு உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்தது. இக்ராவை தவிர வேறு யாரையாவது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு முலாயம் கடத்தி வந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவரது மனுவுக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“முலாயம் செய்த ஒரே குற்றம் காதலில் விழுந்ததுதான். இது இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று அவருக்கு ஒருபோதும் தெரியாது, ”என்று சாந்தி அவர்கள் வீட்டிற்கு வெளியே சுவரில் சாணத்தை தட்டியவாறே கூறினார். மேலும், “காதலுக்கு கண் இல்லை. அவர்கள் என் மகனையும் மருமகளையும் எங்களிடம் அனுப்ப வேண்டும். அவர் எங்கள் மருமகள் மட்டுமல்ல, இப்போது ஒரு இந்திய மருமகள்,” என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment