சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ 1.46 குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மீதான வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தையில் சிலிண்டரின் இம்மாதத்தில் மூன்றாவது முறையாகக் குறைந்துள்ளது.
அதாவது 14.2 கிலோ எடையுள்ள மானிய கேஸ் சிலிண்டர் ரூ.493.53-க்கு தற்போது தலைநகர் டெல்லியில் கிடைப்பதாக, இந்தியாவின் மிகப்பெரும் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி விலை குறைப்பு இம்மாதத்தில் மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளத்து. அதாவது டிசம்பர் 1-ம் தேதி ரூ.6.52, ஜனவரி 1-ம் தேதி ரூ.5.91 என ஏற்கனவே இரண்டு முறை சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
‘சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி எரிவாயு வீழ்ச்ச்சியை சந்திப்பதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால் தான் மானியமற்ற கேஸ் சிலிண்டருக்கு ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது” என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது மானியமற்ற சிலிண்டர் ரூ.659-க்கு டெல்லியில் விற்கப்படுகிறது. ஏற்கனவே இதற்கு டிசம்பர் 1-ம் தேதி ரூ.133-ம், ஜனவரி 1-ம் தேதி ரூ.120.50-ம் குறைக்கப்பட்டுள்ளது. தவிர 14.2 கிலோ எடையுள்ள 12 கேஸ் சிலிண்டரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடந்தோறும் வழங்குகிறது அரசு. அவர்களுக்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் மதிப்பைப் பொறுத்து இந்த மானியம் ஒவ்வொரு மாதமும் வித்தியாசப்படுகிறது. சர்வதேச சந்தையில் மதிப்பு உயரும் போது, அரசும் சிலிண்டர் மானியத்தை அதிகரிக்கும்.