Maharashtra Governor calls for Assembly session on Thursday to conduct trust vote against Uddhav Thackeray-led MVA govt: மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, வியாழக்கிழமை (ஜூன் 30) காலை 11 மணிக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தானும் தன்னுடன் உள்ள எம்.எல்.ஏ.,க்களும் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மும்பை வரவுள்ளோம் என்று கூறினார். ஒரு வாரத்திற்கும் மேலாக, ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களுடன் அசாமின் கவுகாத்தியில் இருந்து வருகிறார், மேலும் பாலாசாகேப் தாக்கரே மற்றும் ஆனந்த் டிகேவின் சித்தாந்தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் கட்சியின் புதிய பிரிவை தொடங்குவதாக அறிவித்தார். கடந்த வாரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டலில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர மக்களின் அமைதி மற்றும் செழிப்புக்காக கவுஹாத்தியின் காமாக்யா கோயிலில் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார்.
இதையும் படியுங்கள்: கொலை செய்யப்படுவதற்கு முன், போலீஸ் பாதுகாப்பை கேட்டிருந்த உதய்பூர் தையல் கடைக்காரர்
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், முன்னாள் முதல்வரும், பா.ஜ.க தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ்பவனில் செவ்வாய்க்கிழமை சந்தித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது, எனவே, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தார். மேலும், “யாருடைய தவறான எண்ணங்களுக்கும் இரையாகாதீர்கள். உங்களுக்கு சிவசேனா கொடுத்த மரியாதை எங்கும் கிடைக்காது. தாங்கள் முன் வந்து பேசினால் பிரச்னைகளை தீர்த்து வைப்போம். சிவசேனா கட்சித் தலைவர் மற்றும் குடும்பத் தலைவர் என்ற முறையில் நான் இன்னும் உங்களைப் பற்றி கவலைப்படுகிறேன். பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்றும் உத்தவ் அழைப்பு விடுத்தார்.
இந்தநிலையில், ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, உத்தவ் தாக்கரே அரசை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.