Maharashtra : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தேசியவாத காங்கிரஸ் கட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புனேவில் நடத்தியது. கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலக் கட்சித் தலைவர் ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார், தனஞ்சய் முண்டே, எம்.பி.க்கள் சுப்ரியா சுலே, சுனில் தட்கரே போன்றோரும் கலந்து கொண்டனர்.
பவாரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் சந்தித்து சிவசேனாவுடன் இணைந்து மாநில ஆட்சியமைப்பதற்கான இறுதி முடிவை எடுப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மையக் குழு கூட்டத்திற்குப் பிறகு, கட்சித் தலைவர் நவாப் மாலிக், “என்சிபி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் திங்களன்று டெல்லியில் சந்தித்து எதிர்காலத் திட்டம் குறித்து முடிவு செய்வார்கள், இது மாற்று அரசாங்கம் அமைப்பது குறித்ததாக இருக்கும்” என்றார்.
சிவசேனாவுடன் கலந்தாலோசித்து இரு தரப்பினரும் தயாரித்த பொதுவான குறைந்தபட்ச திட்டம், நிச்சயமாக அந்த விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் தெரிகிறது. “அரசாங்க உருவாக்கம் மற்றும் எதிர்காலத் திட்டம், விவாதத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் மாலிக்.
சிவசேனா - என்.சி.பி-காங்கிரஸ் அரசாங்கம் விரைவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பொறுப்பேற்கும் என்று என்.சி.பி நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். "இரு கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு, இரு கட்சிகளின் மற்ற தலைவர்களும் செவ்வாயன்று டெல்லியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனவும் மாலிக் தெரிவித்தார்.
கடந்த வாரம் காங்கிரஸ் தூதுக்குழு மும்பைக்குச் சென்றபோது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலும் ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து விவாதித்தனர். உத்தவ், சோனியா காந்தி ஆகியோரும் இதுகுறித்து விரிவாக ஆலோசித்துள்ளனர்.
முக்கிய கூட்டத்திற்குப் பிறகு, பல பாஜக எம்எல்ஏ-க்கள் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகவும் என்சிபி மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறினார். "பல பாஜக எம்எல்ஏக்கள், குறிப்பாக தேர்தலுக்கு முன்னர் என்சிபியை விட்டு வெளியேறியவர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப விரும்புகிறார்கள்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.