இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு வர இருக்கிறார். டெல்லியில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதில் கலந்து கொள்வதற்காக ராஜபக்ச இந்தியா வருகிறார். பாஜக கட்சியின் முக்கிய தலைவரான சுப்ரமணிய சுவாமி இலங்கை சென்று இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நேரில் கொடுத்து, அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தியாவிற்கு வருகை புரிய இருக்கும் ராஜபக்ச
இந்த நிகழ்விற்கு நிச்சயமாக மகிந்த ராஜபக்ச வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து செய்தி ஒன்றினை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் சுப்ரமணிய சுவாமி. அது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு ராஜபக்சவிற்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ராஜபக்சவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
மகிந்த மிகவும் தன்மையான, பண்பாடு மிக்க மனிதர். நெல்சன் மண்டேலா, அவருடைய நாட்டினருக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததிற்கு நாம் பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்ததைப் போல் ராஜபக்சவிற்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை மக்களையும் இந்திய மக்களையும் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம் என்றும் அந்த ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.