திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், மாதவிடாயின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கின் காரணமாக, சீருடை மற்றும் மேசையில் ரத்தம் கசிந்துவிடவே, அதனால், வகுப்பு ஆசிரியர் மற்ற மாணவர்கள் முன்பு கடுமையான வார்த்தைகளால் திட்டியதால், 12 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
ஒருபுறம், மாதவிடாய் குறித்த அடிப்படை புரிதல்கள் ஆசிரியர்களுக்கு இல்லாமல்போன நிலையில், மஹராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பாரதி லாவேகர் மாதவிடாய் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், சானிட்டரி நாப்கின்கள் வங்கி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
மராத்வாடா பகுதியை சேர்ந்த பாரதி கடந்த 25 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். இருப்பினும், குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதை தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கும் பாரதி, TEE என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார்.
120 கிராமங்களைக் கொண்ட சிரூர் சாசர் தாலுகாவில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 1000 ஆண்களுக்கு, 669 பெண்கள் என்ற விகிதாச்சாரத்தில் இருந்தது. இதையடுத்து, பாரதியின் தொண்டு நிறுவனம் அதே ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி தத்தெடுத்தது. அங்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.5,000 வைப்பு நிதியை செலுத்தி வந்தது பாரதியின் தொண்டு நிறுவனம்.
இதையடுத்து, 1,000 ஆண்டுகளுக்கு 921 பெண்கள் என்ற விகிதத்தில் உயர்ந்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாரதி, விதன் சபா தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கான சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கினார் பாரதி.
இதுகுறித்து பாரதி yourstory.com-க்கு அளித்த பேட்டியில், “ஓலைகள், இலைகள், சுகாதாரமற்ற துணிகள் மூலமாக ஆரோக்கியத்திற்கு கெடுதலான முறையில் பெரும்பாலான பெண்கள் மாதவிடாயை எதிர்கொள்கின்றனர். இதனால், கர்ப்பப்பை புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக 27 சதவீத பெண்கள் இறக்கின்றனர். 70 சதவீத இந்திய பெண்களின் குடும்பத்தால் சானிட்டரி நாப்கின்களை வாங்க முடிவதில்லை.”, என கூறினார்.
அதனால், இதற்கொரு தீர்வு காண பாரதி முயற்சித்தார். டிஜிட்டல் சானிட்டரி நாப்கின்கள் வங்கியை கடந்த மே மாதம் 28-ஆம் தேதி ஆரம்பித்தார்.
“ஒரு மாதத்திற்கு பெண்ணுக்கு தேவைப்படும் நாப்கின்களை வாங்க ஆகும் செலவு ரூ.70, அதன்மூலம் 10 நாப்கின்கள் வாங்கலாம். அதனை வாங்குவதற்கான தொகையை மற்றவர்கள் தானமாக வழங்கலாம். ஒரு மாதம், ஒரு வருடம், பல வருடங்களுக்கான தொகையை வழங்கி பெண்களுக்கு உதவலாம். உதவுபவர்களுக்கும், உதவி செய்பவர்களுக்கும் இடையே எங்கள் தொண்டு நிறுவனம் பாலமாக செயல்படுகிறது”, என பாரதி கூறினார்.
இதுவரை, 2 லட்சம் சானிட்டரி நாப்கின்களை பாரதி இந்த நிதியின் மூலம் விநியோகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.