மும்பையில் இருக்கும் அந்தேரி பகுதியின் கிழக்கினையும் மேற்கினையும் இணைக்கும் கோக்லே மேம்பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த மேம்பாலம் மும்பையின் மேற்குப் பகுதியை அந்தேரியின் ரயில் நிலையத்துடன் இணைக்கும் முக்கியமான பாலமாகும். மேம்பாலம் தண்டவாளங்கள் மீது இடிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இடர்பாடுகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம். புகைப்படம் - நிர்மல் ஹரிந்தரன் (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
தீயணைப்புத்துறை மற்றும் மும்பை காவல் துறையினர் இணைந்து விபத்து நடைப்பெற்ற பகுதியில் ஏற்பட்ட இடர்பாடுகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
கட்டிட இடர்பாடுகளை அப்புறப்படுத்தும் தீயணைப்புத்துறை ஊழியர்கள்
மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இடர்பாடுகளை அப்புறப்படுத்தும் பணி கொஞ்சம் தாமதமாகியுள்ளது. மழை மற்றும் விபத்து காரணமாக மேற்கு மும்பை நகர்பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மும்பையில் இன்று காலை பெய்த கனமழை - புகைப்படம் அமித் சக்ரவர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருக்கும் காரணத்தால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.
மும்பை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சஞ்சய் நிருபம், கட்சித் தொண்டர்களால் இயன்ற உதவியை செய்யும்மாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விபத்தில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.