மும்பை அடுக்குமாடி கட்டட விபத்தில் ஆறு பெண்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பையின் கட்கோபரில் நான்கு அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. செவ்வாய் கிழமை இந்த அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர். எனினும், இந்த விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 8 பேர் இதுவரை சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அப்பணிகளின்போது இடிந்து விழுந்ததாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பதினாறு பேர் அருகிலுள்ள சாந்தி நிகேதன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுள் மூன்று மாத குழந்தை ஒன்றும் பரிதாபமாக உயிரிழந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.
இடிந்துவிழுந்த கட்டடத்தின் தரை தளத்தில் பிரசவ க்ளீனிக் ஒன்றும் செயல்பட்டு வருவதாகவும், அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.