மும்பையில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 -ஆக அதிகரித்துள்ளது. 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
மும்பையில் உள்ள பைகுலா பகுதியில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கட்டட இடிபாடிகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயணைப்பு படைக்கு தகவல் கிடைத்ததும், உடனே மீட்புப் பணிக்கு வீரர்கள் விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கியருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிந்த கட்டடமானது 110 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதனால், அங்கு வசிப்பவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம் என 2011-ம் ஆண்டே மகாராஷ்ட்ர அரசு நோட்டீஸ் அனுப்பியதாம். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் இருந்ததனால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மதியம் 1.30 மணி வரையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட 3 வீரர்கள் காயமடைந்தனர்.
30-க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.