சென்னைவாசிகள் அவ்வளவு எளிதில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மறந்திருக்க மாட்டார்கள். அப்படி மறக்கவியலாத வெள்ள பாதிப்புகளைத் தான் மும்பை மக்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து, செவ்வாய் கிழமை தொடர்ந்து 12 மணிநேரங்கள் மழை பெய்திருக்கிறது. இதில், செவ்வாய் கிழமை 8.30 மணி வரை 315.8 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பாதிவாகியுள்ளது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்துவிட்டது. ஆனால், சென்னை வெள்ளத்தின்போது சமூக வலைத்தளங்கள் மூலம் எப்படி இளைஞர்கள் திரண்டு உதவி செய்தனரோ, அதுபோல மும்பையிலும் நெகிழ்ச்சி சம்பவங்கள் பல அரங்கேறின.
அப்படி, மும்பை வெள்ளத்தில் சிக்கி உதவி எதிர்பார்த்தவர் தான் அக்தர் ரசா. கார், பேருந்து போக்குவரத்து எல்லாம் முடங்கியது. வீட்டிற்கு போக முடியாது என எதிர்பார்த்திருந்த நிலையில் தான், வாட்ஸ் ஆப் மூலம் முகமது அஹமது என்பவர் உதவிக்கு வந்தார். தன் இருசக்கர வாகனத்தில் சகி நகா பகுதிக்கு வந்து, அக்தர் ரசாவை ஏற்றிக்கொண்டு குர்லா பகுதியில் உள்ள அவரது வீடு வரை சேர்த்தார்.
முகமது மட்டுமல்ல, ஆரிஃப் கான் என்பவர் தன் இருசக்கர வாகனம் மூலம் கிட்டத்தட்ட ஏழு பேரை அவர்களது வீட்டில் சேர்த்தார். “அஹமதாபாத்திலிருந்து ஐந்து பேர் சுற்றுலாவாக லால்பாக்சா ராஜா தரிசனத்திற்காக வந்து, வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்துக்கு வழியில்லாமல் தவித்தனர். அஹமதாபாத்துக்கு செல்ல வேண்டிய ரயிலையும் அவர்கள் தவறவிட்டனர். அவர்களை மசூதியில் தங்க ஏற்பாடு செய்தோம். இம்மாதிரியான தருணங்களில் யாரும் மதத்தை பார்ப்பதில்லை.”, என ஆரிஃப் கான் கூறினார்.
மசூதிகள், குருத்துவாராக்கள், கோவில்கள் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மத, சாதி பேதமின்றி திறக்கப்பட்டன. தேவாலயங்களில் உணவுகள் வழங்கப்பட்டன.
எந்தவித பேதங்களுமின்றி வெள்ள பேரிடர் காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.